கருணாநிதி பிறந்த நாள்... நேரில் வந்து வாழ்த்துவாரா மு.க.அழகிரி??
மதுரை: திமுக தலைவர் கருணாநிதியால் அஞ்சா நெஞ்சன் என வர்ணிக்கப்பட்டவர் மு.க.அழகிரி. ஆனால் அவராலேயே கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அப்படி ஒரு மகன் இருப்பதையே மறந்து விட்டேன் என்ற ஆதங்க வெறுப்புக்கும் ஆளானவர். இந்த நிலையில், வரும் ஜூன் 3 ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினம். அன்று, மு.க.அழகிரி கருணாநிதியை வாழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து, முரசொலி பதிப்பை கவனிக்க மதுரைக்கு மு.க.அழகிரியை திமுக தலைவர் கருணாநிதி அணுப்பிவைத்தார்.
அதற்காக மதுரை சென்றவர் தான் மு.க.அழகிரி.

கட்சியைக் காத்தவர்
திமுகவில் இருந்து வைகோ பிரிந்த போது, தென் மாவட்டத்தில் பல முக்கிய தலைவர்கள், வைகோ பின்பு அணி வகுத்து செல்ல முயன்ற போது அவர்களை தடுத்து திமுகவில் தக்க வைத்தார். இதனால், மு.க.அழகிரி மீது திமுக தலைவர் கருணாநிதி மனதில் தனி இடம் கிடைத்து.

சிறை சென்றவர்
தி.மு.க.முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கில் சிறை சென்றார். அப்போது மு.க.அழகிரி வசம் பல அதிரடி பிரமுகர்கள் இருந்து செயல்பட்டதால், திமுகவில் மு.க.அழகிரி கோஷ்டி உருவானது.

பதவி கொடுத்து பரிசு
தென் மாவட்டத்தில், திருமங்கலம் உட்பட பல இடைத் தேர்தல்களில் திமுக வெற்றிக்கு மு.க.அழகிரி காரணமாக இருந்தார். இந்த வெற்றிகளுக்கு பரிசாக, தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டது.

அஞ்சா நெஞ்சன்
மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதியே மு.க.அழகிரியை அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்தார். பின்பு மத்திய மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். அதன் பின்பு தென்மாவட்டங்களில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார்.

ஸ்டாலினுடன் மோதல்
இந்த நிலையில், திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வங்கப்பட்டது. இது மு.க. அழகிரிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது. அப்போது முதலே மு.க. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையே பனிப் போர் கடுமையானது.

கருணாநிதியிடம் வாதம்
இந்த நிலையில், மு.க. அழகிரின் அதிரடி செயல்பாடுகளால், அவரது ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்காக திமுக தலைவர் கருணாநிதியிடம் சென்று நேரிடையாக வாதாடினார் மு.க. அழகிரி.

கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது. அப்போது திமுக தலைமை கருத்துக்கு எதிராக மு.க.அழகிரி கருத்து தெரிவித்தாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் திமுகவில் இருந்து மு.க.அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார்.

கருணாநிதியைக் காப்பேன்
அப்போது முதல், மு.க.ஸ்டாலின் , திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரியாமல் பல அரசியல் நடவடிக்கைகள் செய்வதாக மு.க.அழகிரி குற்றம் சாட்டினார். மேலும், வரும் காலத்தில், திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் காப்பாற்றுவதே தனது முதல் பணி என சவால் விடுத்தார்.

விட்ட சாபம் பலித்ததே
நடைபெற்று முடிந்த தேர்தலின் போது, அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரையுமே, மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார். இதனால் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் தோற்கும் என்று சவால் விட்டார் அழகிரி. திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.

மகனே இல்லை...
இதனால் கோபம் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி , மு.க.அழகிரி பற்றி கூறுகையில் தனக்கு அப்படி ஒரு பிள்ளை இருப்பதாகவே நினைக்கவில்லை, அதை மறந்து விட்டேன் என மனம் வெந்து கருத்து கூறினார்.

கருணாநிதி பிறந்த நாள்
இந்த நிலையில், ஜூன் 3 ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வருகின்றது. கருணாநிதி பிறந்த தினம் அன்று மதுரையில் மு.கஅழகிரியும், அவரது ஆதராவளர்களும் மதுரையில் பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.

என்ன செய்யப் போகிறாய்...
ஆனால், இந்த முறை திமுகவில் இருந்து மு.க. அழகிரி -யும், அவரது முக்கிய ஆதரவாளர்களுடம் நீக்கப்பட்டதோடு, மு.க.அழகிரிக்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதியே கருத்து தெரிவித்துள்ளதால், அடுத்த கட்ட நவடிக்கையாக மு.க. அழகிரி என்ன செய்யப் போகின்றார் என திமுக வட்டாரமே எதிர்பார்த்து காத்துள்ளது.

வெள்ளைக் கொடியா.. கோபக் கொடியா...
ஒரு வேளை கோபாலபுரம் வந்து திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்று வெள்ளைக் கொடியை பறக்கவிடுவாரா அல்லது தனது நிலையில் மாறாமல், மதுரையிலேயே டேரா அடித்து திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடுவாரா அல்லது கருணாநிதி பிறந்த தின கொண்டாட்டங்களை தவிர்த்து ஒதுங்கிவிடுவாரா அல்லது அன்றைய தினம் வெளியூர் பயணம் ஏதாவது செய்து சர்ச்சைகளில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவாரா என்று பலவிதமான யூகங்களில் கட்சியினர் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications