தமிழக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அதிமுக, திமுக!
சென்னை: தமிழக அரசியலில் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு முக்கியக் கட்சிகளான திமுக,அதிமுக, காங்கிரஸ் ஆகியவை சென்றுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம்.
நிச்சயம் இருக்கிறது.. நடக்கவே முடியாதது என்று சொல்லவே முடியாது. காரணம், பாஜக தலைமையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள புதிய கூட்டணி.

பாஜகவை மறந்து விடுங்கள்
பாஜகவை விட்டு விடுங்கள்... ஆனால் இவர்கள் சேருவார்களா என்று யாருமே கனவு கூட கண்டிராத பாமகவும், தேமுதிகவும், மதிமுகவும் ஒன்றாக கை கோர்த்துள்ளனர். இது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.

சக்தியாக மாறுமா கொ.ம.தே.க.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சிறிய கட்சியாக இருக்கலாம். பல பிரிவுகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கவனிப்புக்குரியதாக இருந்த சக்தி அது. நாளையே அத்தனை கொங்கு நாடு கட்சிகளின் பிரிவுகளும் என்று சேர்ந்து மறுபடியும் பழைய சக்தியாக மாறி நின்றால்.. நிற்காது என்று சொல்லவும் முடியாது.

பாமகவும்.. ஓட்டை போட்ட விஜயகாந்த்தும்
வட மாவட்டங்களில் அசைக்க முடியாத வாக்கு வங்கியை தன்னத்தே கொண்டிருந்த கட்சி பாமக. இப்போதும் அதற்கென்று ஒரு செல்வாக்கு உள்ளது. ஆனால் அதன் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையைப் போட்டவர் விஜயகாந்த். அதனா்ல்தான் விஜயகாந்த் மீது அத்தனை கோபமாக இருந்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்று விஜயகாந்த்துக்கு அன்புமணி ராமதாஸ் பொன்னாடை போர்த்துகிறார். அன்புமணியும், சுதீஷும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி பேசுகின்றனர்.

சந்தர்ப்பவாத கூட்டணிதான்.. ஆனால்...
இன்றைக்கு இது சந்தர்ப்பவாத சந்திப்பாக இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. லோக்சபா தேர்தலில் எதிர்பாராத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை இந்தக் கூட்டணி பெற்று விட்டால், குறிப்பாக வட மாவட்டங்களில் பெற்று விட்டால்... தேமுதிகவும், பாமகவும் நிச்சயம் சட்டசபைத் தேர்தலில் கை கோர்த்து திமுக, அதிமுகவுக்கு பெரும் சவாலாக நிற்கும் என்பது உறுதி.

இதை விட வாய்ப்பு இல்லை
திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் சக்திகளை ஓரம் கட்ட இவர்களுக்கு இதை விட பெரிய வாய்ப்பு கிடைக்காது. அந்த வாய்ப்பு வந்தால், நிச்சயம் இணையக் கூடிய வாய்ப்புகள் 200 மடங்கு பிரகாசமாக உள்ளன. அதற்கான முன்னோட்டமாக இவர்கள் நிச்சயம் லோக்சபா தேர்தலை எடுத்துக் கொள்வார்கள் என்பதே அரசியல் தெரிந்தவர்களின் கருத்து.

திமுக - அதிமுகவுக்கு நிச்சயம் மிரட்டல்தான்
பாஜக கூட்டணி என்று வெளியில் பார்க்கப்பட்டாலும் உண்மையில் திமுகவும், அதிமுகவும் பயப்பட வேண்டியது பாமக, தேமுதிக, மதிமுக பற்றி மட்டும்தான். மற்றவர்களை விட இவர்கள்தான் உண்மையில் திமுக, அதிமுகவுக்கு மிகவும் அபாயகரமானவர்கள். இவர்கள் சேர்ந்ததே பெரிய விஷயம். சேர்ந்த இவர்கள் நாளைக்கு வலுவாகி விட்டார்கள் என்றால், நின்று காட்டி விட்டார்கள் என்றால், அதையே பயன்படுத்தி திமுக, அதிமுகவை விரட்டியடிக்க எந்த வகையான கூட்டணிக்கும், விட்டுக் கொடுத்தலுக்கும் கண்டிப்பாக இறங்கிப் போவார்கள் என்பது உறுதி... யாருமே அதை மறுக்க முடியாது.

விரட்டியடிக்க முடிவு செய்து விட்டால்
நீ அதை எடுத்துக்கோ, நான் இதைப் பார்த்துக்கிறேன்.. நமக்கு எதிரி திமுக, அதிமுக. இரண்டையும் விரட்டியடிப்போம்.. அடுத்து என்ன என்பதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்று இவர்கள் முடிவு செய்தால், நிச்சயம் திமுக, அதிமுகவுக்கு கஷ்டம்தான். வட மாவட்டங்களில் தேமுதிக, பாமக கூட்டணி என்பது வலுவானால், மனப்பூர்வமாக இரு தரப்பும் கை கோர்த்து விட்டால், நிச்சயம் திமுக, அதிமுகவுக்கு கஷ்டம்தான்.

சின்னதாக வென்று விட்டாலே போதும்
இன்று அமைந்துள்ள இந்தக் கூட்டணி லோக்சபா தேர்தலில் கணிசமான சாதனையைச் செய்து விட்டாலே போதும் சட்டசபைத் தேர்தலின்போது மீண்டும் இதே கூட்டணி மீண்டும் அணி சேரும். அப்போது இப்போது இருப்பதை விட கூடுதலாக நிறைய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அதை மறுக்கவே முடியாது.

தேமுதிக - பாமக - மதிமுக
ஒரு வேளை தேமுதிகவும் பாமகவும், மதிமுகவும் சேர்ந்து ஒரு புதுக் கூட்டணி அமைத்தால் - அதாவது சட்டசபைத் தேர்தலுக்கு பாஜகவை தவிர்த்து விட்டு - கூடுதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இழுக்க முடியும். அதேபோல தலித் கட்சிகளையும் சேர்கக முடியும். ஏன் திருமாவளவனே கூட வந்தாலும் வரலாம். கிருஷ்ணசாமியும் கூட வரலாம்.. வர மாட்டார்கள் என்று கூற முடியாது - காரணம் இது அரசியல். இங்கு சாதனையை விட, கொள்கையை விட வெற்றிக்குத்தான்,. பலாபலனுக்குத்தான் முக்கியத்துவம்.

தெரிந்தோ தெரியாமலோ...
இப்படி பல முக்கியமான அரசியல் கணக்குகளுக்கான பிள்ளையார் சுழியை தெரிந்தோ தெரியாமலோ பாஜக இன்று தனது தலைமையில் போட்டுள்ளது.

புதிய சரித்திரத்திற்கு வாய்ப்பு
இந்தக் கூட்டணி வென்றாலோ அல்லது வாக்கு வங்கியில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தினாலோ எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி புதிய சரித்திரத்தை எழுதும் வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

பேராபத்துதான்
ஆயிரம் விமர்சனங்கள், கிண்டல்கள் இருந்தாலும் கூட எதார்த்தமாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூட்டணி நிச்சயம் - இப்போது இல்லாவிட்டாலும் - எதிர்காலத்தில் திமுக, அதிமுகவுக்கு பேராபத்து என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications