முடங்கிய இரட்டை இலை ஆர்.கே. நகரில் சூரியன் உதிக்க வாய்ப்பு!
இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளதால் ஆர். கே. நகரில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அதிமுக என்ற கட்சியும், வெற்றிச் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டதால் மிகப்பெரிய துயரத்தில் அதிமுக தொண்டர்கள் ஆழ்ந்துள்ள நிலையில் ஆர்.கே. நகர்
இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியனுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் முதன்முறையாக சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் அதிமுக என்ற கட்சியையும், இரட்டை இலை என்ற சின்னத்தையும் பயன்படுத்தாமல் தொண்டர்களை சந்திக்கப் போகின்றனர்.
அரசியலில் இளைய தலைமுறையினர் வேட்பாளர் யார் என்று பார்த்து வாக்களித்தாலும் பலரது கண்களும் தேடுவது சின்னத்தைத்தான். அந்த அளவிற்கு அதிமுகவினர் நெஞ்சில்
ஊறிப்போயுள்ளது இரட்டை இலை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ் அணிகள் மோதலால் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

பலமுனைப் போட்டி
இந்த தேர்தலில் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், பாஜக வேட்பாளராக கங்கை அமரன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோர் களத்தில் உள்ளனர். பலமுனை போட்டி நிலவினாலும் இரட்டை இலை என்ற வெற்றிச்சின்னம் இடைத் தேர்தல் களத்தில் இல்லை.

வெற்றி வாய்ப்பு பாதிக்கும்
அதிமுக என்ற கட்சியும், இரட்டை இலை என்ற சின்னமும்தான் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும். இந்த இரண்டுமே இல்லாமல் சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும் தேர்தலை சந்திக்கின்றனர். இவர்களின் புதிய சின்னமும், கட்சியும் எந்த அளவிற்கு வாக்காளர்களை கவரும் என்பது சந்தேகம்தான்.

சூரியன் உதிக்க வாய்ப்பு
இடைத்தேர்தல் வரலாற்றில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது திமுக வெற்றி பெற்றதில்லை. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் முதன்முறையாக கட்சியும், சின்னமும்
முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் மனதில் அதிக அளவில் பதித்துள்ள சூரியனுக்கே வாக்குகள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி
பெற்று வரலாற்று சாதனை பெற வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications