கருணாநிதி உறுதியா இருப்பாரான்னு தெரியலையே!.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம்

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், அத்வானி இருந்தார், வாஜ்பாய் இருந்தார். அவர்கள் நல்ல தலைவர்கள், கண்ணியமானவர்கள். ஆனால் இப்போது பாஜக அப்படியா இருக்கிறது. நரேந்திர மோடி மோடி என்று பேசுகிறீர்கள். ஆனால் அதனால் நான் சற்றும் சலனப்படவில்லை. ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது அதன் தலைமை யார் என்பதையும் பார்க்க வேண்டும் என்று மோடியை தான் ஏற்கவில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார் கருணாநிதி.
இந்த நிலையில் கருணாநிதியைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன். இதுகுறித்து அவர் கூறுகையில், தேவை என்றால் கூட்டணி வைத்துக் கொள்வதும், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்வதும் திமுகவின் நடைமுறை. அதுபோல்தான் இப்போதும் திமுக முடிவு எடுத்துள்ளது.
கூட்டணியைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. திமுக எடுத்த முடிவுக்கு காங்கிரஸின் அந்தத் தோல்விகூட காரணமாக இருக்கலாம். கருணாநிதி தற்போது எடுத்து உள்ள முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம். யாருடன் பாஜக கூட்டணி அமைக்கிறது என்பதை கட்சியின் மேலிடமே அறிவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications