ஆர்.கே.நகரில் முதல்வர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம்.. போட்டியில் முந்துகிறார் மதுசூதனன்?
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முந்தி வருவதாக சொல்லப்படுகிறது. இப்போது போட்டி திமுக மற்றும் அதிமுக நடுவே என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆர்.கே நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள், அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் என நாளுக்கு நாள் தலைவர்கள் தங்களைத் தேடி வருவதால் மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தி.மு.க தரப்பில் செயல்தலைவர் ஸ்டாலினோ , ஆதரவு கூட்டணி கட்சித் தலைவர்களோ மக்களை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்பதால் தற்போதைய சூழலில், தி.மு.க வின் பிரச்சார களம் சற்று தொய்வாகவே காணப்படுகிறது.

முதல்வர், துணை முதல்வர்
அதிமுகவில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீதி வீதியாக தினமும் 5 மணி நேர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். எம்எல்ஏக்களும் தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர். ஆறுக்குட்டி எம்எல்ஏ ஆட்டம் ஆடி வாக்கு சேகரித்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் மதுசூதனன் தரப்பு உற்சாகமாக காணப்படுகிறது.

மானிய விலையில் ஸ்கூட்டர்
மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த "மானிய விலையில் ஸ்கூட்டர்" வழங்கும் திட்டம் ஆர்.கே நகரில் அவரின் பிறந்தநாளான வரும், பிப்ரவரி 24ம் தேதி அன்று தொடங்கப்படும் என்ற அறிவிப்பால் மதுசூதனனுக்கு பெண்கள் மத்தியிலும், கல்லூரி மாணவிகள் மத்தியிலும் திடீர் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக vs அதிமுக
ஸ்டாலின் விரைவில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது திமுக தரப்பும் எழுச்சியடையும். எனவே போட்டி அதிமுக மற்றும் திமுக நடுவேயானதாகவே மாறும் என தெரிகிறது. மண்ணின் மகன் என்ற கோஷத்தோடு இரு தரப்பும் மோதும் நிலையில் தினகரன் சற்று அன்னியப்பட ஆரம்பித்துள்ளார்.

கிடுக்கிப்பிடி
பேராசிரியர் நாஜநாயகம் கருத்துக்கணிப்பில் தினகரனுக்கே வெற்றி என முடிவுகள் வெளிவந்தபோதிலும், அதை லயோலா கல்லூரி தங்களுடயை கருத்து கணிப்பு என சொல்லக்கூடாது. அதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என கூறியுள்ளது. எனவே கருத்து கணிப்புகள் சொல்வதை போல களம் இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் தேர்தல் ஆணையம், மத்திய அரசின் அமைப்புகள் இணைந்து பணப்பட்டுவாடாவை தடுத்தால் அது தினகரன் தரப்புக்கு பின்னடைவாகவே செல்லும் வாய்ப்பு உள்ளது. புதிதாக திறக்கப்பட்ட ஒரு குக்கர் கடையை கூட வருமான வரித்துறையினர் சோதனையிட்டு நெருக்கடியை அதிகரித்திருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications