ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம்... கவுன்சில் தீர்மானம்.. அதிருப்தியில் திரையுலகம்?
சினிமாக்காரர்கள் எப்போதும் ஆட்சியாளர்களின் நிழலில் இருப்பதை விரும்புபவர்கள். அதற்காக ஏதாவது ஒரு சாக்கில் முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்துவதையும், போற்றிப் புகழ்ந்து விளம்பரங்கள் தருவதையும், கலை நிகழ்ச்சிகள் நடத்தி கவுரவிப்பதையும் கடந்த காலங்களில் நிறையவே பார்த்துவிட்டோம்.
ஆனால் 2011 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, முதல் வேலையாக திரையுலகினரை ரொம்ப தூரம் தள்ளி வைத்தார்.

பலமுறை அவரைச் சந்திக்க நேரம் கேட்டும் அவர் தரவில்லை. எந்த பாராட்டு விழாவுக்கும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜெயாடிவியின் 14-வது ஆண்டு விழாவில் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை கவுரவிக்கும் விழா ஒன்று மட்டுமே அவர் பங்கேற்ற திரைவிழா.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது, அவருக்காக திரையுலகினர் உண்ணாவிரதம் நடத்தினார்கள். பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அவர் ரிலீசாகி, வழக்கிலிருந்தும் விடுபட்டபோது தயாரிப்பாளர் சங்கத்தில் அனைவரும் கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.
இப்போது இதுவரை இல்லாத வகையில், விரைவில் நடக்கவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்துத் திரையுலகின் அனைத்துச் சங்கங்களும் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக கடந்த ஜூன் 22 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த தயாரிப்பார்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, "பல்வேறு சோதனைகளைத் தாண்டி வெற்றி எனும் மகுடம் சூடி மீண்டும் அரியணை கண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவரது அகிலம் போற்றும் வெற்றிக்காக தமிழ்த் திரையுலகினர் சார்பில் ஜூன் 24 அன்று மாலை 3 மணி முதல் பிரச்சாரம் நடைபெற உள்ளது," என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஜெயலலிதா கலையுலகத்துக்கு ஏராளமான நன்மைகள் செய்திருக்கிறார் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே பிரச்சாரம் செய்யவுள்ளோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதால் ஜெயலலிதாவும் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தான். அப்படியிருக்கும் போது அவரை எப்படி ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற குமுறல் திரையுலகினர் மத்தியில் இருக்கிறது.
திரையுலகில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் வலுக்கட்டாயமாக அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யச் சொல்வதா?
அப்படியெனில் அடுத்த முறை கருணாநிதி முதல்வராக இருந்தால், சினிமாக்காரர்கள் மொத்தபேரும் அவரது கட்சிக்காக ஓட்டுக் கேட்க வேண்டியிருக்குமா?
அப்படி என்னதான் சினிமாவுக்கு நன்மை செய்துவிட்டார் ஜெயலலிதா?
-இப்படியெல்லாம் அதிருப்திக் கேள்விகள் எழுந்தாலும், இவற்றை வெளிப்படையாகக் கேட்காமல் முணுமுணுத்து வருகின்றனர்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சிகள் என எதுவும் போட்டியிடாத இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதால் என்ன தவறு? என்று திருப்பிக் கேட்கிறது தயாரிப்பாளர் சங்கம்.












Click it and Unblock the Notifications