காற்றின் வேகம் குறைவு - நெல்லை, தூத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு
நெல்லை, தூத்துக்குடியில் வீசும் காற்றின் வேகம் குறைந்து போனதால், காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
நெல்லை: காற்றின் வேகம் குறைந்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்து விட்டது. இதனால் அதிகாரிகள் திகைப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் மின் தேவை ஒரு நாளைக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இங்குள்ள அனல், புனல், காற்றாலை, அணு, சூரிய மின் நிலையங்கள் மூலம் சுமார் 18 ஆயிரம் மெகா வாட்டுக்கு மின் உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் இந்த இலக்கை பல்வேறு தடைகளால் அடைய முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலை மூலம் சுமார் 7 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி கிடைக்கும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் மின் தட்டுபாட்டை போக்க இது பெரிதும் கை கொடுக்கும். இருப்பினும் இதுவரை அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகா வாட் வரை மட்டுமே காற்றாலை மின்சாரம் கிடைத்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவ காற்று குறைந்து காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியும் பாதியாகச் சரிந்து விட்டது. தற்போது 1500 முதல் 3000 மெகா வாட் அளவிலேயே காற்றாலை மின் உற்பத்தி கிடைத்து வருகிறது.
இதை சமாளிக்க அரசு சார்பில் வெளியிடங்களில் இருந்து 2000 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்து தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.