32 வயது காதலனை மணக்க அனுமதி மறுத்த அவரது தாயாரை வெட்டித் தள்ளிய 40 வயது காதலி கைது!
கோவை: கோவையில் தனது தன்னை விட 8 வயது குறைந்த காதலரை மணக்க அனுமதி தர மறுத்த காதலரின் தாயாரை அரிவாளால் வெட்டித் தள்ளி விட்டார் 40 வயதான பெண் ஒருவர்.
கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் அமராவதி (60). இவரது மகன் ராஜேந்திரன் (32). திருமணம் ஆகாத இவர் தர்மபுரியில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு சித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சித்ராவுக்கு வயது 40 ஆகிறது. திருமணமானவர். ஆனால் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்தப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வலுவடைந்து திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு இருவரும் வந்தனர். தாயாரிடம் அனுமதி கேட்பதற்காக கோவை வந்தாரா் ராஜேந்திரன். ஆனால் மீண்டும் அவர் தர்மபுரி திரும்பவில்லை. இதையடுத்து ராஜேந்திரனை போனில் தொடர்பு கொண்ட சித்ரா, என்னாயிற்று என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன், எனது தாயார் அனுமதிக்கவில்லை. எணனவே திருமணம் செய்வது இயலாது என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சித்ரா கோவை கிளம்பி வந்தார். ராஜேந்திரனின் தாயாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் உன்னை விட எனது மகனுக்கு 8 வயது குறைவு. இது பொருந்தா திருமணம், அனுமதி தர மாட்டேன் என்று கூறி விட்டார். இதனால் கோபமடைந்த சித்ரா, அமராவதியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு ஓடி விட்டார்.
அமராவாதியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தர்மபுரிக்குத் தப்ப முயன்ற சித்ராவை பஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்து கொண்டு சென்றனர்.