நள்ளிரவில் பெண்கள் ஆவேசம்.. பல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு "காலி"!
நள்ளிரவில் டாஸ்மாக் கடையினுள் புகுந்து அடித்து நொறுக்கிய பெண்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
Recommended Video

பல்லாவரம்: பல்லாவரம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையினுள் புகுந்து ஊழியர்களை வெளியேற்றியதுடன், கடையையும் அடித்து நொறுக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, புலி கொரடு சாலையில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்கும் பணி நடைபெற்று வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மதுக்கடையை திறந்துவிட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைக்கு, மதுபாட்டில்கள் லாரியில் வந்து இறங்கின. இது பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி பெண்கள் ஆத்திரமடைந்தனர். நள்ளிரவு என்றும் பாராமல் மதுக்கடையை முற்றுகையிட்டு, முழக்கங்களை எழுப்பினர்.
இதில் சில பெண்கள் திடீரென்று மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை வெளியே விரட்டியடித்தனர். ஊழியர்கள் தலைதெறிக்க ஒடினார்கள். பின்னர் பெண்கள் கடையை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த மதுபாட்டில்களை சாலையில் வீசி எறிந்து உடைத்தெறிந்தனர். இதனால் சாலையில் மது பெருகி ஓடியது

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச முற்பட்டனர். அதற்கு பெண்கள், "இந்த இடத்தில் டாஸ்மாக் தேவையில்லை என பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் எங்கள் பேச்சினை அதிகாரிகள் கேட்கவில்லை. வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும் மதுக்கடையை திறந்தது எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்த பகுதியிலேயே மதுக்கடை வேண்டாம், உடனடியாக அகற்றவேண்டும்" என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சேதமடைந்த மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.ஒன்றரை லட்சம் ஆகிவிட்டது, உடனே நடவடிக்கை எடுக்க எடுங்கள் என கூறி, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சிவக்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நள்ளிரவு என்றும் பாராமல் பெண்கள் ஒன்றுதிரண்டு டாஸ்மாக் கடையினுள் புகுந்து ஊழியர்களை விரட்டியதுடன், கடையை அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications