அடையாறு ஏரியாவில் சாலையில் திடீர் பள்ளம்.. செல்ஃபி எடுக்க மக்கள் கூட்டம்! போலீசாருக்கு தலைவலி
சென்னை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் ஏற்பட்ட 6 அடி ஆழ பெரிய பள்ளத்தை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியை மக்கள் வியப்போடு பார்த்து செல்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் கடந்த பல நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடையாறு பகுதியை ஒட்டிய மத்திய கைலாஷ் கோயில் அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதை பார்த்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வியப்பும், அச்சமுமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றி தடுப்புப் பலகைகள் வைத்து, போக்குவரத்தை சரிசெய்தனர்.
பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ள நீர் அழுத்தத்தால் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து, பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Work begins to repair the caved in road, Madhya Kailash #Chennai. Police hav tough time as locals throng to witness pic.twitter.com/3yOvW6Etnk
— Shreesha Reddy (@shreeshareddy) December 1, 2015
இந்த பள்ளத்தை பார்க்கவும், அதோடு செல்ஃபி எடுத்து சமூக தளங்களில் போடவும் மக்கள் அங்கு படையெடுக்கின்றனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் சிரமமாகியுள்ளது.
கே.கே. நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பள்ளங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. சென்னையின் கட்டுமானம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை இது ஏற்படுத்துகிறது.