கோயம்பேட்டில் பயங்கரம்.. வாலிபர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் கழுத்து அறுத்து வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலைய நுழைவுவாயில் எதிரே சிக்னல் உள்ளது. நேற்றிரவு சிக்னலுக்காக ஏராளமான வண்டிகள் காத்திருந்தன. அப்போது சிக்னலையொட்டி உள்ள சென்டர் மீடியன் பகுதியில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு, ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து, உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். வாலிபரின் பின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. எனவே, அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அவரது சட்டை பாக்கெட்டில் 20 ரூபாயும் கஞ்சா பொட்டலமும் இருந்தது. பேன்ட், சட்டை அணிந்துள்ளார். கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று விசாரிக்கின்றனர். பரபரப்பு மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.