கலக்குகிறார் அறந்தை நிஷா.. கட்சிக்காரங்க தவிர எல்லாரும் உதவறாங்க.. மக்கள் ஆதங்கம்
அரசியல்வாதிகள் யாருமே வரவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தஞ்சாவூர்: கட்சிக்காரங்க தவிர எங்களுக்கு மக்கள் உதவி கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நிஷாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
புயல் பாதித்த நாளிலிருந்தே தனியார் அமைப்புகள் முதல் தனி நபர்கள் வரை உதவி செய்ய கிளம்பி விட்டனர். இதில் முக்கியமானவர் விஜய் டிவி புகழ் நிஷா.
இவர் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் வீடியோக்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. உதவிகளை திரட்டிக்கொண்டு, நிவாரண பொருட்களை அள்ளிக் கொண்டு கிராமம் கிராமமாக பறந்து கொண்டிருக்கிறார் நிஷா.
நிவாரண பொருட்கள்
இது சம்பந்தமாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும், கிண்டல், கேலிகளையும் தூக்கி தூர போட்டு விட்டு, பாதிப்படைந்த மக்களை தேடி நிஷா ஓடிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் ஒரு கிராமத்திற்குள் நிவாரண பொருட்களுடன் நிஷா சென்றிருக்கிறார்.
அதிராமபட்டினம்
அந்த இடத்திலிருந்தே அப்பகுதி மக்களுடன் நடத்திய உரையாடலையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினம் முத்தம்மாள்தெருவில் உள்ள ஒரு கோவிலுக்குள் தரையில் உட்கார்ந்து கொண்டு நிஷா அவர்களுடன் பேசுகிறார். நிஷாவை சுற்றிலும் ஊர் மக்கள் நின்று கொண்டும், உட்கார்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.
கோயிலில் நிஷா
அப்போது நிஷா பேசும்போது சொன்னதாவது, இது ஒரு கோவில்.. இந்த ஊர்க்காரங்க எல்லோருமே இங்கதான் இருக்காங்க. இங்கதான் தங்கி சமைச்சு சாப்பிடறாங்க. அந்த அளவுக்குதான் இவங்களுக்கு இங்கே இடம் இருக்கு. இவங்களுக்கு வீடு கிடையாது, சாப்பாடு தண்ணி எதுவுமே இல்லை.
அன்பு உள்ளங்கள்
குழந்தைங்க எல்லாருமே இங்க பட்டினியா இருக்காங்க. இதுல ஒரு கொடுமை என்னன்னா... பசி, பட்டினியோட இருந்தாலும் என்னை சிரிச்சிட்டே வரவேற்கிறாங்க இந்த கிராம மக்கள். என்னை மட்டும் இல்லை.. இங்கே வர்றவங்க யாரா இருந்தாலும் உட்கார வச்சி சாப்பாடு போட்டு அனுப்பற நல்ல உள்ளம் இந்த ஏழை மக்களிடம் இருக்கு.
அதிராமபட்டினத்துக்கு வாங்க
இந்த மாதிரியான மனசு எத்தனை பேர்கிட்ட இருக்குன்னு கூட தெரியாது. தயவுசெய்து உதவி செய்யும் மனசு இருக்கிறவங்க அதிராம்பட்டினத்துக்கு உள்ளே வாங்க. என்றார். பிறகு நிஷா அந்த மக்களிடம் உங்களுக்கு உதவிகள் எல்லாம் வருகிறதா? என்று கேட்கிறார்.
அரசியல்வாதிகள்
அதற்கு மக்கள், "எல்லாரும் தந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் கட்சிக்காரங்களைதான் இன்னும் காணோம். கட்சிக்காரங்க தவிர எல்லாருமே எங்களுக்கு நிறைய உதவிகளை செய்துட்டு இருக்காங்க" என்றனர். அதற்கு நிஷா, "கவலையே படாதீங்க. உங்களுக்கு இன்னும் நிறைய உதவிகள் வரும். காலேஜ் பிள்ளைங்க இருக்காங்க. கண்டிப்பா உதவ உங்ககிட்ட ஓடி வருவாங்க" என்றார்.