என் பொண்ணை மறந்திடு.. அரிவாளால் ஓங்கி வெட்டிய பெண்ணின் பெற்றோர்.. திருவாரூரில் ஷாக்!
திருவாரூர்: மகளின் காதலரை வீடு தேடி சென்று அரிவாளால் பெண்ணின் பெற்றோர் வெட்டி கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ரூதீன் அலி முகமது. இவரது மகன் முகமது பெமினாஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார்.
17 வயதாகும் மகளின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனது மகளை காதலிக்கக் கூடாது என முகமது பெமினாஸிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மதுரை மாநகராட்சியில் ரூ 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. 25 இடங்கள் காலி!
காதலித்த பெண்
ஆனாலும் பெமினாஸும் அந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி தீபா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெமினாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்றார். அங்கு முகமது பெமினாஸ், அவரது பெற்றோரிடையே எங்கள் பெண்ணுடன் உங்கள் மகன் பழக வேண்டாம்.
பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம்
நாங்கள் எங்கள் பெண்ணிற்கு எங்கள் சமூகத்து பையனை திருமணம் செய்ய உள்ளோம் என கூறியுள்ளனர். அப்போது அங்கிருந்த பெமினாஸ், அவர்களிடம் "உங்கள் பெண்ணை நான் காதலிப்பேன், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்" என கூறியுள்ளார். இதனால் விஜயகுமாரும் தீபாவும் கோபமடைந்தனர்.
வெட்டிவிட்டு தப்பியோட்டம்
பின்னர் கையிலிருந்த அரிவாளை எடுத்து முகமது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
பெமினாஸ் உறவினர்கள்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெமினாஸின் உறவினர்கள் அடியக்கமங்கலத்தில் விஜயகுமார் வைத்துள்ள மருந்துக் கடையை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதனிடையே மயிலாடுதுறையில் பதுங்கியிருந்த விஜயகுமாரையும் தீபாவையும் போலீஸார் கைது செய்தனர். மைனர் பெண்ணை காதலிப்பதால் குணமடைந்தவுடன் பெமினாஸும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.