1999ம் ஆண்டு முதல்... அரசு பள்ளியில் 24 வருடமாக வேலை செய்த போலி ஆசிரியை.. வசமாக சிக்கியது எப்படி?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 24 ஆண்டுகளாக அரசு பள்ளியில் வேலை செய்த போலி டீச்சர் வசமாக சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு. இவர் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1999ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

இவரது சான்றிதழ் குறித்து எந்த சந்தேகமும் எழவில்லை. எப்போதும் போல் பணியாற்றியே வந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வும் பெற போகிறார். சரியாக பணியில் சேர்ந்து 24 ஆண்டுகள் ஆனநிலையில், மர்ம நபர் ஒருவர் தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு போன்போட்டு, ஆசிரியை விஜயபானுவின் சான்றிதழ் போலி என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த தொடக்க கல்வி அதிகாரிகள், 12ம் வகுப்புக்கு கொடுத்தது போலியான சான்றிதழ் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடக்கக் கல்வி டி.இ.ஓ., கலாவதி, ஆசிரியை விஜயபானு மீது புகார் அளித்தார். ஆசிரியை விஜயபானு போலி மதிப்பெண், சான்றிதழ் வரிசை எண் ஆகியவற்றை கொண்டு போலியான மதிப்பெண் சான்றிதழை உருவாக்கி பணியில் சேர்ந்துள்ளதாகவும், 24 ஆண்டுகளாக அவர் ஆசிரியையைக பணியாற்றி வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த புகாரின் பேரில் போலி ஆசிரியை விஜயபானு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் இதுபற்றி கூறும்போது, கண்டமனூர் பகுதி ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஜயபானு. கடந்த 1999ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் பணிக்கு சேர்ந்த 24 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரது சான்றிதழ்கள் போலி என ரகசிய தகவல் வந்தது.
உண்மை அறியும் சோதனைக்காக ஆசிரியை விஜய்பானுவின் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைத்தோம். அந்த ஆய்வில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் போலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே புகார் தெரிவித்தோம். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்கள்.,
இதனிடையே 12ம் வகுப்பு சான்றிதழை போலியாக வழங்கி 24 ஆண்டுகள் அரசுப் பணியில போலி ஆசிரியை ஒருவர் நீடித்தது தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலி ஆசிரியை விஜயபானு விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications