திடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்
Recommended Video
தேனி: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் 2 பேராசிரியர்கள் மீது தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரது மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில் உதித்தின் தந்தை வெங்கடேசன் ரூ.20லட்சம் பணம் கொடுத்து வேறு ஒரு மாணவரை வைத்து தேர்வு எழுதி மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் மகனை சேர்த்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பேராசிரியர்கள் மீது புகார்
இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா தேனி மருத்துக்கல்லூரியில் சேர்வதற்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் மீது அக்கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராஜேந்திரன் விளக்கம்
இதன் காரணமாக இந்த விவாகரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த விளக்கத்தில், மாணவர் சேர்க்கையின் போது ஹால்டிக்கெட்டில் உள்ள நபர் தான் பங்கேற்றார். அதன் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது என்று தெரிவித்து இருந்தார்.

சிக்கல் எழுந்தது
ஆனால் உதித் சூர்யா அளித்த வாக்கு மூலத்தில் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையில் தானே நேரடியாக பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்த நபரின் புகைப்படம் இடம் பெற்றுள்ள ஹால்டிக்கெட்டை வைத்து உதித் சூர்யா கல்லூரியில் சேர்ந்தது எப்படி? கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் போது கவனிக்கத் தவறியது யார் என்ற புகார்கள் எழுந்தது.

டீன் ராஜேந்திரன் புகார்
இந்த சூழ்நிலையில் தான் உதித் சூர்யாவுக்கு தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் மீது அக்கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், பேராசிரியர்கள் எப்படி மாணவருக்கு உதவினார்கள், உதவிய அதிகாரிகள் யார்? என்பது உள்ளிட்ட பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications