மனிதர்களுக்கு மட்டுமல்ல யானைக்கும் மன அழுத்தம் இயல்பு! அரிசி கொம்பன் யானையின் மற்றொரு முகம்!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகர மக்களை கதிகலங்க வைத்த அரிசி கொம்பன் யானை, ஆரம்பத்தில் சாதுவாக தான் இருந்ததாகவும் மன அழுத்தம் காரணமாகவே இப்படி ஆக்ரோஷம் கொள்வதாகவும் கூறுகிறார்கள் மூணாறு பகுதிவாசிகள்.
அரிசி கொம்பன் யானை ஊருக்குள் வர ஆரம்பித்ததற்கு காரணமே, அரிசியையும், தண்ணீரையும் தேடித்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னது அரிசியையா என்று பலருக்கும் ஆச்சரியம் எழும். ஆம், 36 வயதாகும் அரிசி கொம்பன் யானை தனது உணவாக அரிசையை அதிகம் சாப்பிட்டதன் விளைவாக தான் அதற்கு அந்த பெயரே வந்துள்ளது.

குறிப்பாக 2010ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சாதுவாக இருந்த அரிசிக்கொம்பன் அதற்கு பிறகு தான், அதாவது தனது 23வது வயதுக்கு பிறகு கோபத்தை கொட்டித்தீர்க்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது விளையாட்டாக கோபம் கொள்ளத் தொடங்கிய அரிசி கொம்பன் யானை ஒரு கட்டத்தில் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியதற்கு காரணமே அதற்கு ஏற்பட்ட மன அழுத்தம் தான் என்று சொல்லப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்த அரிசி கொம்பனை மேலும் உக்கிரமடையச் செய்யும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்ததாலேயே இப்படி காண்போரை கதி கலங்க வைக்கும் அளவுக்கு அதன் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அரிசி கொம்பனுக்கு உடல் முழுவதும் ரத்தக் காயங்களும், நடக்கக் கூட முடியாத அளவுக்கு சோர்வும் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனிடையே இதனை மயக்க ஊசி மூலம் பிடித்தால் யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் சர்ச்சையை கிளப்புவார்கள் என்பதால் தமிழக வனத்துறை அதனை பிடிக்கும் விவகாரத்தில் மிக கவனமாக கையாண்டது.
இதனிடையே மதம் பிடித்தது போல் சுற்றித்திரியும் அரிசிக் கொம்பனை சற்று பக்குவப்படுத்தினால் அதன் குணாதிசியங்களில் மாற்றம் ஏற்படக் கூடும் என வன உயிரின ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். யானைகளை பொறுத்தவரை அதன் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது தான் ஒரே வழி என்பதால் அந்த நடைமுறையை பின் பற்றி வருகிறது வனத்துறை.












Click it and Unblock the Notifications