திருநெல்வேலியில் திருப்பம்? பூத் கமிட்டி மாநாட்டுக்கு அமித்ஷா வருகை.. நெல்லையில் உயருமா பாஜக ஓட்டு
நெல்லை: நெல்லையில் இன்று நடக்கும் பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை வருகிறார். இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.. நெல்லையில் இம்மாநாட்டை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் துவங்கியிருக்கின்றன.. அந்தவகையில், பாஜக தரப்பிலும் அனைத்து வியூகங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பூத் கமிட்டி மாநாடு
அதன்ஒருபகுதியாக, மண்டலம் வாரியாக பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக நெல்லையில் இன்று மாலை பாஜக பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநாடு நடக்கிறது.. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
அமித்ஷா வருகை
இதற்காக அமித்ஷா இன்று கொச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம், பகல் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடை வந்தடைகிறார்.
பின்னர் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் சென்று தேநீர் விருந்தில் 20 நிமிடம் பங்கேற்று விட்டு, மாலை 3.25 மணிக்கு நெல்லை தச்சநல்லூர், பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.. இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுகிறார்.
சிறப்புரை - பயன்கள்
அங்கு பாஜக தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார். பாஜக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக அமித்ஷா பேச உள்ளார்.
மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்..
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு சிஆர்பிஎப், தமிழ்நாடு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் இணைந்து நேற்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதேபோல, , மாநாடு நடைபெறும் பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications