நயினார் நாகேந்திரன் கோபித்து கொள்ளக் கூடாது.. அவருக்கு உண்மை தெரியும்.. மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை
நெல்லை: திருநெல்வேலியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசிய போது, பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் கோபித்து கொள்ளக் கூடாது என்று மேடையிலேயே சமாதானம் செய்த சம்பவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் நியமனம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் பாஜக தரப்பில் புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போதைய பாஜக தலைவரான அண்ணாமலை மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையில் சுமூகமான உறவு இல்லை.
சில நாட்களுக்கு முன் நயினார் நாகேந்திரனை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நயினார் நாகேந்திரன் மாற்றுக் கட்சிக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனென்றால் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் ஆதரவு காரணமாக, பல்வேறு கட்சிகளில் இருந்தும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தரப்பில் எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2023ஆம் ஆண்டு நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்காக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டது. அந்த நேரத்தில் இடைக்கால நிதியுதவியை கூட மத்திய அரசு செய்யவில்லை.
நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால் அவர் பேச மாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, அமைச்சராக செயல்பட்டவர். திமுக நிர்வாகிகளுடன் அவருக்கு நட்பு உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, நம்முடைய நயினார் நாகேந்திரன் என்று கூறியுள்ளதால், அவர் விரைவில் திமுகவுக்கு வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications