‛‛வெறும் 1% தான் வித்தியாசம்’’.. நெல்லையில் வெல்வது யார்? நயினாருக்கு சிக்கல்! தந்தி டிவி கணிப்பு
திருநெல்வேலி: வரும் லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் கடும் இழுபறி நீடிக்கும் எனவும், தற்போதைய சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இடையே வெறும் ஒரு சதவீத ஓட்டு தான் வித்தியாசம் இருப்பதாவும், இந்த தொகுதியில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முற்றிலுமாக ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி மேற்கொண்ட கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் திருநெல்வேலி தொகுதி என்பது கடும் இழுபறி நீடிக்கும் தொகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எளிதாக வெல்வார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் தந்தி டிவி கருத்து கணிப்பில் பெரிய ஏற்பட்டுள்ளது.
அதாவது திருநெல்வேலி தொகுதியில் கடந்த முறை திமுக வெற்றி பெற்றது. ஞானதிரவியம் எம்பியாக இருந்தார். இந்த முறை திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். பாஜகவில் திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன் களத்தில் உள்ளார். அதிமுக சார்பில் ஜான்சி ராணி, சீமானின் நாம் தமிழர் சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தந்தி டிவி கருத்து கணிப்பில் நூலிழையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசுக்கு 34 முத்ல 40 சதவீத ஓட்டுகளும், பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு 33 முதல் 39 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது வெறும் 1 சதவீதம் தான்.
இந்த வாக்கு வித்தியாசம் என்பது லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் மிகமிக குறைவாகும். இதனால் இந்த தொகுதியில் வரும் தேர்தலில் காங்கிரஸின் ராபர்ட் புரூஸ் மற்றும் பாஜகவின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இடையே கடும் போட்டி நிலவும். கடைசி கட்ட பிரசாரம், சாதி அடிப்படையிலான வாக்குகள் உள்ளிட்டவை தான் இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு வெற்றியை தேடி தரும். இருப்பினும் தற்போதைய சூழலில் நூலிழையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் உள்ளார்.
மேலும் இந்த தொகுதியில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படுகிறது. அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 17 முதல் 23 சதவீத வரையிலான ஓட்டுகளை பெறுவார் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் சத்யா 5 முதல் 8 சதவீத ஓட்டுகளுடன் 4ம் இடத்தை பிடிப்பார் எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர மற்றவர்கள் 1 முதல் 3 சதவீத ஓட்டுகளை தேர்தலில் அறுவடை செய்யலாம் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications