நெல்லை.. மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்பு.. தெருவிற்கு சீல்
நெல்லை: நெல்லையில் மீண்டும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டையில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தெருப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி சீல் பூட்டப்பட்டது.
Recommended Video
வேகம் எடுக்கும் கொரோனாவால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவிவருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் ந்தேதி முதல் கொரோனா தாக்கம் பரவத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 7 மாதத்திற்கு பின் சற்று நோயின் தாக்கம் குறையத் தொடங்கியது.
வணிக நிறுவனங்கள்
இந்த நிலையில் ஊரடங்கில் மாதந்தோறும் தளர்வுகள் செய்யப்பட்டு பொதுபோக்குவரத்து , வணிக நிறுவனங்கள் , பள்ளிகள் தொடங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வந்தது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம்
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று நன்கு குறைந்து நாள் ஒன்றுக்கு 300 பேர் என்ற நிலைதான் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. ஆனால் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழக அளவில் ஆயிரத்தை தாண்டுகிறது. நெல்லை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 20க்கு மேல் உயர்ந்து வந்தது.
பாளையங்கோட்டை
இந்நிலையில் பாளையங்கோட்டை முனையாடுவார் நாயனார் தெருவில் சென்னையில் இருந்து வந்த மீன் வியாபரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த தெருப்பகுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
மீண்டும் பரவல்
மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியுள்ளது நெல்லை மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று நெல்லை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.