வைகோவின் 51-வது திருமண நாள்! கலிங்கப்பட்டி பூர்வீக வீட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
தென்காசி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது 51-வது திருமண நாளை கலிங்கப்பட்டியில் உள்ள பூர்வீக இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அரை நூற்றாண்டு காலம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சுக துக்க நிகழ்வுகளின் போது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நின்று இன்று 51-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வைகோ -ரேணுகா தம்பதி.
ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள்.. தமிழக அரசு இயங்குகிறதா.. கேட்கிறார் அண்ணாமலை..!
வைகோ தொடர் தோல்விகளை சந்தித்த காலங்களிலும், தமிழக உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த தருணங்களிலும் நெஞ்சுறுதியுடன் நின்று குடும்பத்தை கவனித்துக்கொண்டவர் வைகோவின் மனைவி ரேணுகா.
வைகோ திருமணநாள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 51-வது திருமண நாள் விழா தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அவரது பூர்விக வீட்டில் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. பொதுவாக வைகோவை பொறுத்தவரை திருமண நாள், பிறந்தநாள் என எந்த விழாக்களையும் பெரிதாக கொண்டாட விரும்பாதவர். கட்சி நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும் பங்கேற்பதையே பெரிதாக எண்ணக்கூடியவர். இப்படிப்பட்ட சூழலில் இன்று தனது 51-வது திருமண நாளை கட்சி நிர்வாகி ஒருவரது வலியுறுத்தலின் பேரில் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
ரோஜாப்பூ மாலை
ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிந்துகொண்ட வைகோவும் அவரது மனைவி ரேணுகாவும், கலிங்கப்பட்டியில் உள்ள பூர்விக வீட்டின் வரவேற்பரையில் வைத்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். வைகோவின் தாயார் படம் வைக்கப்பட்டிருந்த இடம் அருகே கேக் வெட்டப்பட்டது. இதில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்கள் சிலரும் மட்டுமே கலந்துகொண்டார்கள். காரணம் இது குறித்த தகவல் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
பெரும் சாதனை
இந்தக்காலத்தில் திருமணம் முடிந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் மனக்கசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் உருவாகிற சூழலில், 51 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது பெரும் சாதனையாகவும், புதுமணத் தம்பதிகளுக்கு பாடமாகவும் பார்க்கப்படுகிறது. வைகோவை பொறுத்தவரை எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படக் கூடியவர். ஆனாலும் அவரது குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு இத்தனை ஆண்டுகாலம் இணையராக வாழ்ந்து வந்திருக்கிறார் ரேணுகா.
சாந்தமான பேச்சு
முன்பெல்லாம் பேட்டிகளில் கூட மிகவும் ஆக்ரோஷமாக பேசி வந்த வைகோ, இப்போது மொத்தமாக மாறியிருக்கிறார். சாந்தமான முறையில் டென்ஷன் ஆகாமல் மிகவும் கூலாக பேசத் தொடங்கியிருக்கிறார். வைகோவிடம் தென்படத் தொடங்கியுள்ள இந்த அதிரடி மாற்றம் அவரது கட்சியினரையே வியப்பட வைத்துள்ளது.