ஜெயித்தால் மத்திய அமைச்சர் கனவு! நெல்லையில் களமிறங்கப்போவது நயினார் நாகேந்திரன்? நயினார் பாலாஜி?
நெல்லை: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அல்லது அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோரில் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நயினார் நாகேந்திரன், ஒரு வேளை தானும் ஜெயித்து, மத்தியில் மீண்டும் பாஜகவே ஜெயித்தால் மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் நைனார் நாகேந்திரனை காட்டிலும் பாஜவில் வலிமையான வேட்பாளர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை நைனார் நாகேந்திரனுக்கு அத்துப்படி. ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் என்பதாலும், உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். அதோடு தேர்தல் செலவுக்கும் பஞ்சப்பாட்டு பாடாதவர். இதனால் இவரையோ அல்லது இவரது மகனையோ வேட்பாளராக நெல்லையில் களமிறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே நெல்லை மக்களவைத் தொகுதி சிட்டிங் திமுக எம்.பி. ஞனதிரவியம் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வரும் சூழலில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளும் முயன்று வருகின்றன. நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் பாளையங்கோட்டை, நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இதில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகள் மட்டுமே நகர் பகுதியில் வருகின்றன.
மற்ற 4 சட்டமன்ற தொகுதிகளும் கிராமப்புறங்கள் நிறைந்தவை. இதனால் வெற்றி எளிதாகும் என பாஜக மேலிடம் கணக்கு போடுவதாக தெரிகிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு முதலாளி என்ற அடைமொழியுடன் தனக்கென ஓரளவு செல்வாக்கை நைனார் நாகேந்திரன் உருவாக்கி வைத்திருப்பது ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது. நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதிக்கம் தான் அதிகமே தவிர தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் குறைவு என்பதும் கவனிக்கத்தக்கது. 2004, 2009 காலகட்டங்களில் தனுஷ்கோடி ஆதித்தன், ராமசுப்பு ஆகிய இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவின் ஓட்டு வங்கி தான் கைகொடுத்தது.
மற்றபடி நெல்லையில் தேசியக்கட்சிகளுக்கு பெரியளவில் வாக்கு வங்கி இருப்பதாக சொல்ல முடியாது. நைனார் நாகேந்திரனை பொறுத்தவரை மகனை தேர்தலில் நிறுத்தவே ஆர்வம் காட்டுவதாக நாம் விசாரித்ததில் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications