உமா மகேஸ்வரி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு அதிரடி மாற்றம்!
உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
நெல்லை: கொலையாளியை நெல்லை மாநகர போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 23-ம் தேதி நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரி ஆகியோர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது நெல்லை உட்பட திமுக தரப்பில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கவும் இந்த பரபரப்பு அதிகமானது.
இதனிடையே, 3 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர், திடீரென உமா மகேசுவரி வீட்டுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலையாளிகள் விழுந்த கிடந்த இடங்களை போட்டோவும் எடுத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துவிட்டு கிளம்பி சென்றனர்.
நெல்லை போலீசார் விசாரித்து வரும் நிலையில், திடீரென சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை இந்த வழக்கு சிபிஐடிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், நாங்களே குற்றவாளியை கைது செய்வோம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உறுதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், இந்த 6 நாட்களுக்குள் கொலையாளியை போலீசார் அதிரடியாக கைது செய்து வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications