பார்சல் கட்ட தாமதமானதால் ஆத்திரம்.. ஹோட்டலை சூறையாடி, ஊழியரை சரமாரியாக வெட்டிய கும்பல்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஹோட்டல் ஊழியரை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை சேர்ந்தவர் சகாய பிரவீன்.
இவர் முக்கூடலில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் அந்த ஹோட்டலுக்கு வந்து உணவு பார்சல் கட்டும்படி கேட்டுள்ளனர்.

ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உணவு பார்சல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் திடீரென ஹோட்டலுக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடினார்கள். ஹோட்டல் ஊழியர் சகாய பிரவீனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சகாய பிரவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹோட்டலை சூறையாடியும், ஊழியரை வெட்டியும் அராஜகத்தில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து வியாபாரிகள் அப்பகுதியில் கடைகளை அடைத்தனர்.
மேலும், அந்த கும்பலை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பொதுமக்களும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications