திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்
திருநெல்வேலி: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்கொள்ளும் முதல் மிகப்பெரிய சவால் என்றால், தனது சொந்தக் கோட்டையான திருநெல்வேலியை ஒதுக்கி வைத்துவிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதியில் தாமரையை மலர வைக்க களம் இறங்கியுள்ளார். 1989-ல் அதிமுகவில் தொடங்கி, இன்று பாஜகவின் மாநில தலைவராக மாறியிருக்கும் நயினார் நாகேந்திரனின் இந்த 35 ஆண்டுகால அரசியல் பயணம் திருப்பங்கள் நிறைந்தது. அவரது அரசியல் வாழ்க்கையின் அடையாளமாக திருநெல்வேலி இருந்தது.
திருநெல்வேலி மாவட்டம் தண்டையார் குளம் கிராமத்தில் 1960களில் பிறந்த நயினார் நாகேந்திரன், 1989-ல் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் களப்பணியாளராகத் தொடங்கி, படிப்படியாக நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என உயர்ந்தார். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட நயினார் நாகேந்திரன், 2001-ல் முதன்முதலாகப் போட்டியிட்ட திருநெல்வேலி தொகுதியிலேயே வெற்றி வாகை சூடினார்.

முதல்முறை எம்.எல்.ஏ ஆன வேகத்திலேயே அமைச்சரவையில் இடம் பிடித்தார். மிக அமைதியானவராக அறியப்பட்ட நயினார் நாகேந்திரன், அந்த ஐந்து ஆண்டுகளில் போக்குவரத்து துறை, மின்சாரம், தொழில்துறை என முக்கியமான துறைகளில் அமைச்சராக இருந்தார். அத்துடன் அதிமுகவின் 'பவர்ஃபுல்' அமைச்சர்களில் ஒருவராக ஐந்து ஆண்டுகள்முழுக்க இருந்தார்.
ஆனால் 2006ம் ஆண்டு தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெறும் 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், 2011-ல் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்து தனது செல்வாக்கை நிலைநாட்டினார். ஆனால் 2016ல் கடும் போட்டிக்கு மத்தியில் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் நிலவிய குழப்பங்களால் அதிருப்தியடைந்தவர், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2019ம் ஆண்டு பாஜக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் 2021ம் ஆண்டு திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து அண்ணாமலைக்கு பிறகு பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அந்தப் பதவியில் செயல்பட்டு வருகிறார். திருநெல்வேலி தான் நயினார் நாகேந்திரனின் அடையாளம். அங்கிருந்து ஏன் சாத்தூருக்கு நயினார் நாகேந்திரன் மாற வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனெனில் சாத்தூரில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது சாத்தூர் தொகுதியில் அவர் போட்டியிடுவது பாஜகவின் 'மெகா பிளான்' என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். சாத்தூர் தொகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள விருதுநகர் மாவட்டப் பகுதிகளில், நயினார் நாகேந்திரன் சார்ந்த சமூகத்தினரின் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அவர், தனக்குத் சாதகமான சமூக வாக்குகளைக் கொண்ட தொகுதியில் போட்டியிடுவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்புகிறார்
திருநெல்வேலி அவரது சொந்தக் கோட்டையாக இருந்தாலும், மாறிவரும் அரசியல் சூழலில் சாத்தூர் தொகுதியைக் கூடுதல் பாதுகாப்பான களமாக நயினார் கருதுகிறாராம். திருநெல்வேலியில் கடும் போட்டிகளுக்கு பிறகே கடந்த முறை வென்றார். தற்போது மாநிலத் தலைவராக இருக்கும் நயினார், தேர்தலின் போது தொகுதிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டியிருக்கும்.
எனவே ஆதரவு உள்ள தொகுதியில் போட்டியிடுவது தனக்கு பெரிய சுமையைக் குறைக்கும் என நயினார் நினைக்கிறார். தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக முக்கியப் பங்கு வகிக்கிறது. சாத்தூர் தொகுதியில் அதிமுகவின் அடிமட்டக் கட்டமைப்பு மிகவும் பலமாக உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகள் ஒன்றாகச் சேரும்போது, அது வெற்றிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்றும் நயினார் நம்புகிறார். நயினாரின் நம்பிக்கை உண்மையாகுமா என்பதை அறிய மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications