பொதிகை, சிலம்புல போறவங்களா.. அக்டோபர் 1 முதல்.. இதுக்குத்தான் காத்திருந்த தென்காசி .. சூப்பர்
திருநெல்வேலி: பொதிகை மற்றும் சிலம்பு ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அக்டோபர் 1 முதல், விருதுநகர்,தென்காசி வழித்தடத்தில் டீசல் என்ஜினுக்கு பதில் மின்சார என்ஜின் மூலமாக பயணத்தை தொடங்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர்கள் காலத்தில், அதாவது 1904ம் ஆண்டு கொல்லம் - தென்காசி - அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி ரயில்வே வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டது. அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு ரயில் வழித்தடங்கள் அகலப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கொல்லம் - தென்காசி - அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி வழித்தடமும் 2012-ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

இதேபோல் மதுரையில் இருந்து கேரளாவிற்கு செல்வதற்காக தென்காசி - ராஜபாளையம் - விருதுநகர் வழித்தடமானது 1927-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டது. பின்னர் இந்த பாதையும் 2004-ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
இதனிடையே விருதுநகர் - தென்காசி, திருநெல்வேலி - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதில் திருநெல்வேலி - தென்காசி இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து ரயில்கள் இயங்குகின்றன.
இதேபோல் விருதுநகர் - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையே கடந்த ஓராண்டாக நடந்த மின்மயமாக்கல் பணி நடந்து வந்தது. அந்த பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே கிராஸிங்குகளில் வாகனங்கள் தண்டவாளத்தை கடக்கும்போது மின் கம்பிகளில் உரசாமல் இருக்க உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்தும் விட்டது.
இதனிடையே விருதுநகர் - செங்கோட்டை இடையே மின்சார இன்ஜின் சோதனை ஓட்டமும் நடந்து வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்நிலையில், இந்த பாதையில் விரைவில் மின்சார ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே விருதுநகர்,தென்காசி வழித்தடத்தில் அக்டோபர் 1 முதல் பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த பணி நிறைவடைந்தால் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப் பாளையம் வரை செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இதேபோல் திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்படும் பிலாஸ்பூர் ரயிலின் காலி பெட்டிகளைக் கொண்டு திருநெல்வேலியில் இருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரயில் இயக்க வேண்டும் என்றும் பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருவுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்றும், திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு ரயில் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. இதேபோல் குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயக்கப்படும் ரயிலை தென்காசி, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கைகள் எல்லாம் விரைவில் சாத்தியமாக வாய்ப்பு உள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்க அந்த மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். டெல்லி - மதுரை சம்பர்க்கிராந்தி ரயிலை ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்த கோரிக்கையும் மின்மயமாக்கல் காரணமாக சாத்தியமாக வாய்ப்பு உள்ளது. இதற்கு ரயில்வே அமைச்சகம் தான் இனி மனது வைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications