சுராஜுக்கு நடந்த கொடூரம் மறைவதற்குள்.. திருவள்ளூரில் பயங்கரம்! வட மாநில தொழிலாளர் மீது தாக்குதல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மீண்டும் வடமாநில இளைஞர் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. காய்கறி கடையில் வேலை பார்த்து வரும் வெளி மாநில இளைஞர்களில் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல், ரத்த காயம் ஏற்படும் அளவுக்கு சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சுராஜ் என்ற இளைஞர் ஒருவரை சிறுவர்கள் உள்பட 4 பேர் ரத்தம் சொட்ட சொட்ட ரீல்ஸ் வீடியோ எடுத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் மறைவதற்குள் மீண்டும் அதுபோன்ற சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே ப்ரித்வி நகர் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காய்கறி கடையில் அராஜகம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ப்ரித்வி நகர் பகுதியில், மஸ்தான் பாபு - கவிதா தம்பதியினர் காய்கறி கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இவர்கள் கடை வைத்து உள்ளனர். இந்த கடையில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த கடையில் வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர்கள் அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடை ஆரம்பித்த சில நாட்களிலேயே வட மாநில இளைஞர்களிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேண்டும் என்றே வம்பிழுத்து வருவதாக கூறப்படுகிறது. வட மாநில இளைஞர்களும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார்களாம்.
ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு
எனினும் அடிக்கடி இதேபோன்று சில இளைஞர்கள் கடைக்கு வந்து வட மாநில இளைஞர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கடையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் தான் இந்த கடைக்கு வந்த சில இளைஞர்கள் வட மாநில தொழிலாளி ஒருவரை ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி வாங்குவது போல் வரும் இளைஞர்கள் சிலர் அங்கு வேலைபார்த்து வரும் வட மாநில இளைஞர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி வேண்டும் என்றே வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபடுவது போல் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.
போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தொழில் போட்டி காரணமாக சிலர் இந்த வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும், இது போன்று நடக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்
ஏற்கனவே திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரயிலில் சென்ற சுராஜ் என்ற வெளி மாநில இளைஞரை ரீல்ஸ் வீடியோ எடுத்து சிறுவர்கள் அராஜகம் செய்தனர். ரீல்ஸ் எடுக்க வேண்டாம் என அந்த இளைஞர் கூறியதால் சுராஜை தனி இடத்துக்கு அழைத்து சென்று ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த இளைஞர் வலியில் கதறித் துடித்தார். இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications