தலைவர் பதவியை ராஜினாமா செய்யாத திமுக! கொதிக்கும் காங்கிரஸ்! ஸ்ரீபெரும்புதூர் அரசியல் கலாட்டா!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற திமுக நகரச் செயலாளர் மனைவி இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இதனால் திமுக காங்கிரஸார் இடையே அங்கு மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

திமுக வெற்றி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வெற்றி பெற்றன. இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரிக்கு எதிராக திமுக நகரச் செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தியை போட்டியிட வைத்து 11 வாக்குகள் செலுத்தி வெற்றிபெற வைத்தனர்.

வெறும் 4 வாக்குகள்
காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி வெறும் 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தன்னை சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திமுகவினர் நாடகம்
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகரச் செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை.
இதனால் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவின் மாவட்டச் செயலாளர் நாடகம் ஆடுவதாகவும் அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே இது போன்ற செயல் நடைபெற்றதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

காங்கிரஸ் உறுதி
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு செண்டிமெண்டான பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பால் உயிரிழந்தார். இதனால் எப்பாடு பட்டேனும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது.












Click it and Unblock the Notifications