ஐஜி அன்புவின் பூர்வீக வீட்டில் திருட்டு.. போலீஸுக்கே பெரும் சவால்.. மண்டை காய வைக்கும் மர்மம்
திருவள்ளூர்: வடக்கு மண்டல ஐஜி அன்பு வீட்டில் கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மண்டல ஐஜி அன்பு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சியை சேர்ந்தவர். இவர் ஏஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார். மத்திய குற்றப்பிரிவு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஐஜியாக பணியாற்றினார்.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் கடத்தப்பட்ட ஏராளமான சிலைகளையும் அதை கடத்தியவர்களையும் கண்டறிந்தார். மேலும் சிலைகளையும் மீட்டெடுத்தார். அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.

நியமனம்
இதையடுத்து அந்த பதவிக்கு அன்பு நியமிக்கப்பட்டார். அவர் வெளிநாடுகளில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரும் பணிகளை செய்திருக்கிறார். இவர் தென் மண்டல ஐஜியாக இருந்த போது பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரும்பாக்கம்
அது போல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் 32 கிலோ நகைக் கொள்ளையில் தொடர்புடையவர்களையும் அதற்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டரையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கைது செய்தார் அன்பு. மேலும் அவர்களிடம் இருந்து 32 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

கொலை கொள்ளை
இது போல் நிறைய கொலை கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்த அன்புவின் வீட்டிலேயே நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஜி அன்புவின் பூர்வீக வீட்டில்தான் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றது. ஐஜி அன்புவுக்கு அவ்வப்போது பணிமாறுதல் கிடைக்கும் என்பதால் இந்த வீட்டை அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் பராமரித்து வருகிறார்.

அன்பு வீடு
இவர்தான் பல ஆண்டுகளாக அன்புவின் வீட்டை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைகளை முடித்து விட்டு மீண்டும் திங்கள்கிழமை அந்த பாதுகாவலர், அன்புவின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ஊத்துக்கோட்டை போலீஸ்
இதையடுத்து அந்த நபர் ஊத்துக்கோட்டை போலீஸாருக்கு புகார் கொடுத்துள்ளார். ஐஜி வீட்டிலேயே கொள்ளையடித்தவர் யார் என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். நகை, பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுவிட்டார். இதையடுத்து ஐஜி அன்பும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டதால் அந்த கொள்ளையனை பிடிப்பது போலீஸாருக்கு ஒரு சவாலான காரியமாகவே உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஒரு ஐஜி வீட்டிலேயே திருட்டு நடந்துள்ளது பெரும் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications