"பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகை சித்ரா மரண வழக்கு! கணவர் ஹேமந்தை விடுதலை செய்த கோர்ட்
திருவள்ளூர்: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவருடைய கணவர் ஹேமந்த் (ஹேம்நாத்) விடுதலை செய்யப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி இன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பலரது மனங்களை கவர்ந்தவர். போலீஸ் காவலரின் மகளான இவர் அடையாறு பகுதியில் காவலர் குடியிருப்பில் இருந்து வந்தார். இவர் இசிஆர் சாலையில் ஒரு வீடு கட்டி வந்தார்.

நவீன வசதிகளுடன் வீடு கட்டப்பட்ட நிலையில் சித்ராவுக்கும் அவரது நண்பர் ஹேமந்துக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஹேமந்த் என்பவர் சித்ராவுக்கு சினிமா டிக்கெட்டுகளை கொண்டு வந்து கொடுத்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சித்ரா எங்கு ஷூட்டிங் சென்றாலும் அங்கெல்லாம் ஹேமந்தும் செல்வாராம். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்காக ஈவிபி பிலிம்சிட்டிக்கு வந்த சித்ரா, அந்த நிகழ்ச்சியின் இடைவெளியின் போது ஹேமந்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சமாதானமான இருவரும் நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேமந்த் (இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது) மீது புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேமந்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேமந்த்தை விடுதலை செய்வதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications