ஷாக்! கொதிக்கும் ரச அண்டாவில் விழுந்த மாணவர் துடிதுடித்து பலி! திருவள்ளூர் திருமண மண்டபத்தில் சோகம்
திருவள்ளூர்: திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரச பாத்திரத்தில் மாணவர் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் காலத்தில் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் போதே வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிக்கும் போதே இதுபோன்ற பார்ட் டைம் வேலையால் காசு கிடைக்கும் பாக்கெட் மணிக்கு உதவும் என்பதால் இளைஞர்கள் பலரும் இப்போது இதுபோன்ற வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

கேட்ரிங்: பெரும்பாலும் கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் மாணவர்கள் கேட்ரிங் வேலைகளுக்கே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சில மணி நேரம் வேலை, அவ்வப்போது வேலை கிடைக்கும் என்பதாலேயே திருமண கேட்ரிங் வேலைகளுக்கு அவர்கள் செல்கிறார்கள். இருப்பினும், சமையலறையில் செய்யும் வேலை என்பதால் கேட்ரிங் வேலைகளிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கிறது. எளிதாக விபத்துகள் ஏற்படும் ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடந்துள்ளது. அங்கே கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ஆம் தேதி நடந்துள்ளது. அங்கே திருமண மண்டபத்தின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 20 வயதான இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.
உயிரிழப்பு: இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே மருத்துவர் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது. அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அவர் எதிர்பாராத விதமாகச் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த இளைஞர் 20 வயதே ஆன சதீஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சதீஷ் அங்கே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் படித்து வந்த சதீஷ், பகுதி நேரமாக அங்கே இருக்கும் கேட்டரிங் சர்வீஸில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தான் எதிர்பாராத விதமாக இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வலிப்பு: முன்னதாக கடந்தாண்டும் தமிழ்நாட்டில் கூழ் காய்ச்சும் நிகழ்வில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தது. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் கூழ் காய்ச்சும் நிகழ்வு நடந்தது. 6 பேர் இந்த பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் என்பவருக்கு வலிப்பு ஏற்படவே நிலை தடுமாறிய அவர், அப்படியே கூழ் காய்ச்சிக் கொண்டு இருந்த மிகப் பெரிய அண்டாவில் விழுந்துள்ளார்.
அங்கிருந்த மக்கள் அவரை மீட்க முயன்ற போதிலும் அண்டாவில் கூழ் கொதித்துக் கொண்டு இருந்ததால், எளிதாக அந்த நபரை வெளியே கொண்டு வர முடியவில்லை. வெளியே எடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே அவர் பரிதமபாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications