சிப்காட் போராட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு ஜாமீன்.. கோர்ட்டில் தினமும் கையெழுத்து போட நிபந்தனை!
திருவண்ணாமலை: செய்யார் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டு ரோட்டில், கடந்த ஜுலை 2ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டத்தின் 124-வது நாளான கடந்த நவம்பர் 2ஆம் தேதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யார் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகளை போலீசார் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர். விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில் 19 விவசாயிகள் வேலூர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும், அருள் என்பவர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 20 பேருக்கு ஜாமீன் வழங்கி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications