நித்தி கம்மிங்.. கைலாசாவில் குருபூர்ணிமா! “நித்தியானந்தா” நிச்சயம் வராராம் -அடித்துசொல்லும் சீடர்கள்
திருவண்ணாமலை: கிரிவலம் சென்ற நித்தியானந்தா சீடர்கள் குருபூர்ணிமா விழாவில் நித்தியானந்தா நிச்சயம் கலந்துகொள்வார் என்று கூறியுள்ளனர்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றினார்.

கைலாசாவில் நித்தியானந்தா
கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்த நித்தியானந்தா, பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தா எப்படி தப்பினார்? கைலாசா எங்கிருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கின.

வைரலான பேச்சுக்கள்
கைலாசா ஆப்பிரிக்கா அருகே உள்ள ஒரு தீவு என்ற ஒரு தகவலும் பரவியது. கைலாசா என்ற யூடியூப் சேனலில் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு உபதேசம் வழங்கும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வந்தன. அவரது பேச்சுக்கள் அனைத்தும் தினசரி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி நகைச்சுவையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அடுத்த சில மாதங்களில் நித்தியானந்தா குறித்தும், கைலாசா குறித்தும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

நித்தியானந்தா உடல்நிலை
இதற்கிடையே கடந்த சில வாரங்கள் முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நித்தியானந்தாவின் சீடர்கள் இரு முடியை கையில் ஏந்தியவாறு ஓம் நித்யானந்தா பரமசிவம் என்ற மந்திரத்தை உச்சரித்தவாறு கிரிவலம் வந்தனர்.

சீடர்கள் நம்பிக்கை
அப்போது பேசிய அவர்கள் வரும் ஜூலை 13 ம் தேதி நித்தியானந்தா சமாதி நிலையில் மேற்கொண்டுள்ள தியானத்தில் இருந்து வந்து பக்தர்கள் மத்தியில் சத்சங்கம் செய்ய உள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவித்தனர். பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பெங்களூர் வரை சென்று கைலாசாவின் குருபூர்ணிமா விழாவில் கலந்து கொண்டு நித்தியானந்தாவின் சத்சங்க பேச்சை கேட்க உள்ளதாக அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications