பக்தர்கள் போற்றும் அரசு.. அற்பர்கள் கதறும் அரசு.. இதுதான் திராவிட மாடல்.. ஸ்டாலின் பேச்சு!
திருவண்ணாமலை: பக்தர்கள் போற்றும் அரசாகவும் அற்பர்கள் கதறும் அரசாகவும் திராவிட மாடல் அரசு இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றினார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், திமுக அரசு, ஆன்மீகத்திற்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் திருவண்ணாமலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "ஆன்மீகத்தின் முக்கியமான அடையாளமாக இருக்கும் நகரங்களில் ஒன்று, இந்தத் திருவண்ணாமலை! "எல்லார்க்கும் எல்லாம்" என்று அனைத்து மக்களுக்குமான அரசாக, நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.
ஆன்மீகக் கோயில்கள் முறையாகச் செயல்படுவதற்காக இந்து சமய அறநிலையத் துறையை நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியதே, நீதிக்கட்சி ஆட்சிதான். அனைத்துத் துறையும் வளர்வதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று முழங்கி, திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
'திராவிடம்' என்ற சொல் யாருக்கெல்லாம் பயத்தைக் கொடுக்கிறதோ - யாருக்கெல்லாம் பிடிக்காதோ - அவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல! கலைஞர் பாணியில் சொன்னால் "கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது!" என்பதே எங்கள் எண்ணம்! மொத்தத்தில், மதங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அதிகமாகக் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் எது தெரியுமா? இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் விழாக்கள்தான். அந்த அளவுக்கு ஏராளமான பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறோம்.
என்ன பணிகள் செய்யப்படிருக்கிறது என்று ஒரு சிறிய பட்டியல் போட வேண்டும் என்றால், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டிருக்கிறோம். 1500 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்திருக்கிறோம். கிராமப்புறக் கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ஆண்டுக்கு 1250 கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கி இருக்கிறோம். கோயில் திருப்பணிகளுக்கு வழிகாட்ட 'வல்லுநர் குழுவை' அமைத்திருக்கிறோம். பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரமாண்டு பழமையான 112 கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் குளங்களைச் சீரமைத்திருக்கிறோம்.
இறைவனுடைய கோயிலில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' என்ற சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால்தான் பக்தர்கள் போற்றும் அரசாகவும் - அற்பர்கள் கதறும் அரசாகவும் - நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது! ஆன்மீகப் பெரியவர்கள் - மடாதிபதிகள் போற்றிப் பாராட்டும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மக்களைப் பண்படுத்தத்தான் ஆன்மீகத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர - பா.ஜ.க போன்று மக்களைப் பிளவுபடுத்தப் பயன்படுத்தக் கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications