இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. திருவண்ணாமலையில் செங்கல் வைத்து வழிபாடு செய்யும் ஆந்திர பக்தர்கள்
திருவண்ணாமலை: உலகப் புகழ்பெற்ற சிவ வழிபாட்டு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சமீப காலமாக "செங்கல் வைத்து வழிபாடு" என்ற புதிய நம்பிக்கை பக்தர்களிடையே வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் இந்த நடைமுறையை அதிகளவில் கடைபிடிப்பதால் செங்கல்கள் குவிந்து வருகின்றன.
அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில நாட்களாக செங்கல்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்யும் முறை அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோயில் வளாகத்தில் செங்கல்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வழிபாட்டின்படி, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனதில் நினைத்து ஒரு செங்கல்லை எடுத்து குறிப்பிட்ட இடங்களில் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

வீடு கட்டுதல், நிலம் வாங்குதல், குடும்ப பிரச்சனைகள் தீருதல் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையால் பலர் இந்த செங்கல் அடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் ஏராளமானோர் இந்த முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் கோவில் சுற்றுப்பகுதிகளில் செங்கல்கள் குவிந்து காணப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செங்கல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழிபாட்டுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்றும், கோவில் நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் வைரலாகி, பக்தர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications