நாக்கை வைத்து வியாபாரம் செய்பவர் பழ கருப்பையா- அமைச்சர் காமராஜ்!
திருவாரூர்: பழ.கருப்பையா நாக்கை வைத்து வியாபாரம் செய்பவர் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள படத்தில் பழ.கருப்பையா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இலவசங்களை எரிக்கும் காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன. அதிமுக அரசின் செயல்பாட்டை அனைவரும் கண்டித்தனர். விஜய் கூறுவதில் என்ன தவறு, அதிமுக அமைச்சர்களில் யார் நல்லவர் என்று பழ கருப்பையாவும் கேள்வி எழுப்பினார்.
நம்பாதீர்
இந்நிலையில் அதிமுக சார்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் இலவசத்தை நம்பாதீர் என சிலர் சொல்கிறார்கள்.
வளர்ச்சி
காசுக்காக படம் நடிப்பது, அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தங்களுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை பாமர மக்கள்தான் முடிவு செய்வர். இலவச திட்டங்களால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
நாக்கை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி
பழ கருப்பையா ஒரு வியாபாரி. நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ கருப்பையா அதிமுகவில் இருந்த போதும் எங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மேடையில் பேசினார்.
விவாதிக்க தயாரா
அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ கருப்பையா கேட்கிறார். நான் சொல்கிறேன். அதிமுகவின் அமைச்சர்கள் அனைவரும் யோக்கியர்கள்தான். வேண்டுமென்றால் நேராக வருகிறேன். ஒரே இடத்தில் என்னுடன் விவாதிக்க தயாரா என அமைச்சர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.