அதிமுக இணைப்புக்கு பாஜக மிரட்டவில்லை.. விஜய் தலைமையில் மெகா கூட்டணி.. டி.டி.வி தினகரன் பரபர தகவல்
திருப்பூர்: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை, நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதிமுகவில் உள்கட்சி பூசல்கள் கடந்த சில வருடங்களாக வெடித்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக அந்தப் பிரச்சனைகளை சரி செய்வதற்கான முயற்சியில் பாஜக டெல்லி மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. இதுகுறித்து டி.டி.வி தினகரன், அதிமுக இணைப்புக்காக பாஜக அதிகாரம் வைத்து மிரட்டவில்லை. விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் களத்தில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

அதிமுக பஞ்சாயத்து
ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக, ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக டெல்லி தலைமை தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவினர் இணைய வேண்டும் என்று பாஜகவினர் 2021 தேர்தலிலேயே முயற்சி செய்தனர். இது போல இப்போதும் முயற்சி செய்கிறார்கள். கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கும்போது அவர்களே எப்படி பேசி தீர்க்க முடியும். கட்சி பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தம் தேவையானது.
பாஜக மிரட்டவில்லை
மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை நான் தவறாகவோ, தலையிடுவதாகவோ நினைக்கவில்லை. அதிமுக இணைப்புக்காக பாஜக அதிகாரம் வைத்து மிரட்டுவதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக நான் நினைக்கவில்லை. கூட்டணியில் இருக்கும்போது அந்தக் கட்சியில் உள்ள பிரச்சனையை சரி செய்வது மிரட்டுவது இல்லை.
இது நட்புரீதியானது. தமிழ்நாடு அமைதி பூங்கா. சாதி, மதம் கடந்து இங்கு அனைவரும் மதநல்லிகணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எல்லோரும் சமம் என்கிற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறோம். கடவுள் பெயரையோ, சாதி பெயரையோ பயன்படுத்தி யாரும் கலவரம் செய்ய கூடாது. சுமூகமாக முடிக்க வேண்டிய பிரச்சனைகளை அனைத்து இயக்கங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்.
விஜய் தலைமையில் கூட்டணி
2026 சட்டமன்ற தேர்தலில் சீமான் தனித்து போட்டியிடுகிறார். இது இல்லாமல் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக தனித்தனியாக உள்ளன. விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையப் போவதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. நான் யாருடன் இணைவது என்று முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியானவுடன் நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.
கூட்டணிக்காக யாரிடமும் நிபந்தனைகள் எல்லாம் நான் விதிக்க மாட்டேன். நட்பு ரீதியாக பேசுவதுடன் சரி. அமமுக இடம்பெறும் போகும் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும். அடுத்தடுத்து கோவை, திருப்பூரில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். சட்டமன்ற தேர்தலுக்காக கிளைக்கழகத்தில் இருந்து எங்களின் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications