திருச்சி சிவா சொன்ன ‘உப்புமா’ கதை.. பாஜக வந்தது இப்படித்தான்.. 2019ல் நடந்தது இனி நடக்காதாம்!
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் தான் கூறிய "உப்புமா" கதையை நினைவுகூர்ந்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை திமுக தலைவருமான திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு பேசினார்.

இந்தக் கூட்டத்தில் வலிமையான கூட்டணி அவசியம் என்பதை வலியுறுத்தும் குட்டிக் கதை ஒன்றை திருச்சி சிவா கூறினார். திருச்சி சிவா பேசுகையில், "ஒரு கல்லூரி விடுதியில் தினந்தோறும் காலை நேரத்தில் உப்புமா மட்டுமே போடுகிறார்கள். இதனால் சலிப்படைந்த மாணவர்கள் ஆளுக்கு ஒரு உணவின் பெயரை சொல்லி அதை போட சொல்கிறார்கள். குழம்பிப் போன விடுதி காப்பாளர் "நான் ஒரு வாக்கெடுப்பு நடத்துகிறேன். அதில் எந்த உணவை அதிகமானோர் தேர்வு செய்கிறீர்களோ அதையே காலை உணவாக தருகிறேன்" எனக் கூறினார்.
அந்த வாக்கெடுப்பில் 6 பேர் பரோட்டா வேண்டும் என்றார்கள். 12 பேர் முட்டையும் ரொட்டியும் வேண்டும் என்றார்கள். 14 பேர் பூரி வேண்டும் என்றார்கள். 18 பேர் இட்லி வேண்டும் என்றார்கள், 21 பேர் உப்புமா என்றார்கள். அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் 'உப்புமா' மீண்டும் காலை உணவாக தேர்வானது. இதுதான் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். எல்லா எதிர்க்கட்சிகளும் சிதறுண்டு கிடந்த காரணத்தால் 21 பேர் ஆதரித்த உப்புமா ஜெயித்ததை போல மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லா எதிர்க்கட்சிகளையும் அந்த தேர்தலில் ஒன்று சேர்த்தார். இதனால்தான் ஒட்டுமொத்த இடங்களையும் திமுக கூட்டணி வென்றது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் தலைவர் எல்லா தலைவர்களையும் ஒன்று சேர்ப்பார் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கும் போதே பேசினேன்." என்றார்.
மேலும் பேசிய திருச்சி சிவா, "மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா உடனடியாக நடைமுறைக்கு வராது. கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போல் தெரிகிறது. இது ஒரு கண் துடைப்பு நாடகம். இந்த நாட்டிலே எல்லோரும் நிம்மதியும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்றால் அதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றே தீர வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எம்.பிக்களை முடக்கி வைத்து சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. சட்டத்தின் துணையுடன் அநியாயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் படுபாதக சட்டங்களுக்கு ஆதரவளித்த கட்சி அதிமுக. பாஜக அரசுக்கு எதிராக பேசிய பலரை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். ஒரே மதம் இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திமுக தலைவரின் முயற்சி வெற்றி பெறும்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications