மனைவியுடன் சண்டை.. பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த கணவன்.. பரிதாப பின்னணி
திருப்பூர்: திருப்பூரில் பேஸ்புக் லைவ்வில் வீடியோ வெளியிட்டு 27 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் மணிகண்டன். தனது 13 வயதில் திருப்பூருக்கு வந்தார். அங்கு பல வருடங்களாக வசித்து வரும் இவர், திருப்பூர் மாநகர் வெள்ளியங்காடு பகுதியில் சிலம்பம் மாஸ்டராக இருந்து வருகிறார்.
2 வருடங்களுக்கு முன்னதாக மாலினி என்பவருடன் மணிகண்டனுக்கு திருமணமாகி தாராபுரம் சாலை காட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

நல்ல உறவு
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகவும், கடன் பிரச்சனை காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் பிரச்சனை காரணமாக நேற்று மாலினிக்கும் மணிகண்டனுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை பெரிதாகவே நேற்று இவரது மனைவி அனைத்து தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

புகார்
அந்த புகாரில் தனது கணவர் மணிகண்டன் அதிகளவில் கடன் வாங்கியுள்ளதாகவும், அதுகுறித்து கேட்ட தன்னிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக மணிகண்டனிடம் காவல்துறையினர் பேசி, இன்று முதல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கவுன்சிலிங் போகுமாறு கூறியுள்ளனர். ஆனால் மாலினி போலீசில் புகார் கொடுத்த காரணத்தால் மணிகண்டன் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

கவுன்சிலிங்
இந்த நிலையில் இன்று கவுன்சிலிங் செல்ல புறப்பட்ட போது அவரது மனைவியை போக சொல்லிவிட்டு தான் பின்னால் வருவதாக கூறி வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் பேஸ்புக்கில் லைவ்வில் வந்தவர், இதன்பிறகு என்னால் வாழமுடியாது அதனால் மன்னித்துவிடுங்கள். மனைவி என்னுடன் இல்லை. கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.

தற்கொலை
நான் கேவலமானவனாக மாறிவிட்டேன், அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறிவிட்டு பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நல்லூர் காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கடன்தொல்லைதான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications