துணி காயப்போடுவதற்குள் துயரம்... கல்லூரியில் தெரியாமல் செய்த ஒரு விஷயம்.. திருப்பூரில் சோகம்
திருப்பூர் : கல்லூரியில் தேர்வு எழுத சென்ற மாணவியிடம், தேர்வு அறை கண்காணிப்பாளர் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டாராம். இதனால் மனம் உடைந்த காங்கேயத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை கூட சரியாக கையாளத் தெரியாமல் விபரீதமான முடிவினை தேடிக்கொள்கிறார்கள். அவமானம் என்ற ஒற்றை வார்த்தைக்கு கீழ் தனக்கு நடக்கும் சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்து தவறான மனநிலைக்கு செல்கிறார்கள். உண்மையில் வாழ்வில் என்ன நடந்தாலும், அதை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். மாறாக வாழ்க்கை வெறுத்து தவறான முடிவுகளை எடுக்கவே கூடாது. சரி விஷயத்திற்கு வருவோம்.

கல்லூரியில் தேர்வு எழுத சென்ற மாணவியிடம், தேர்வு அறை கண்காணிப்பாளர் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டாராம். இதனால் மனம் உடைந்த காங்கேயத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காங்கேயம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாளையங்கோட்டை சாலை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீகவிக்கு 22 வயது ஆகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஸ்ரீகவி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவி ஸ்ரீகவி மறந்துபோய் தேர்வு அறைக்குள் தனது செல்போனை எடுத்துச் சென்றுவிட்டாராம். இதனை கவனித்த தேர்வு அறையின் கண்காணிப்பாளர், ஸ்ரீகவியிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டாராம்.
அத்துடன் விளக்க கடிதம் ஒன்று எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் 15 நாட்கள் கழித்து செல்போனை திரும்ப வாங்கிக்கொள்ளுமாறு ஸ்ரீகவியின் பெற்றோரிடம் கூறி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாணவி ஸ்ரீகவி மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டில் ஸ்ரீகவி துணிகளை துவைத்து, பின்னர் அதை அவரது தாயாரிடம் கொடுத்து கீழே காய போட்டு வருமாறு சொல்லியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் துணிகளை எடுத்துக்கொண்டு கீழே சென்று காய போட்டுவிட்டு மேலே வந்தார். பின்னர் ஸ்ரீகவியின் அறைக்குச்சென்று பார்த்தபோது அங்கு ஸ்ரீகவி மின்விசிறியில் தூக்கில் தொங்கி இருக்கிறார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகவியின் தாய் பதறி அடித்தபடி கதறி அழுதுள்ளார். அத்துடன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மாணவி ஸ்ரீகவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவி ஸ்ரீகவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தெரியாமல் செல்போனை தேர்வு அறைக்குள் கொண்டு சென்ற மாணவி, அதற்காக விளக்க கடிதம் கேட்டதால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்து உண்மையில் மிகவும் கோழைத்தனமான முடிவு. தயவு செய்து யாரும் அப்படியான முயற்சியில் ஒருபோதும் இறங்காதீர்கள். தற்கொலை மனநிலை வந்தால் அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து மனநல ஆலோசனை பெறலாம்.












Click it and Unblock the Notifications