முதுகெலும்பு இல்லாத அதிமுக.. இந்தியை திணிக்கும் பாஜக.. போட்டு தாக்கும் கனிமொழி
திருச்சி: வேட்பாளர் பட்டியலைக் கூட தமிழில் வெளியிடாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பாஜக வெளியிட்டுள்ளது என்றும் மத்திய அரசை எதிர்த்து ஒற்றை கேள்வி கூட எழுப்பாத அதிமுகவினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பொன்மலைப்பட்டி பகுதியில் திமுக மகளிரணிச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்தியில் வேட்பாளர் பட்டியல்
அப்போது பேசிய அவர், பாஜகவை எதிர்த்து கேள்வி எழுப்பாத அதிமுகவினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று தாக்கி பேசினார். மேலும் வேட்பாளர் பட்டியலைக்கூட தமிழில் வெளியிடாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பாஜக வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக மீது தாக்கு
அதிமுக ஆட்சியில் பொதுவாக திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டுவார்கள் என்றும் எதையும் நிறைவேற்ற மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார். ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், பயோ மெட்ரிக் முறை சரியாகச் செயல்படுவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் ஊழல் மட்டுமே வெற்றி நடைபோடுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டெண்டர் விடப்பட்டு முறையாக பணிகள் நடைபெறவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், படித்தவர்களின் வேலைவாய்ப்பற்ற நிலை மாற்றப்படும். புதிய தொழில் முதலீடுகள் கொண்டுவரப்படும். அதிலும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% முன்னுரிமை அளிக்கப்படும். திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.

ஆயிரம் கோடி செலவில் விளம்பரம்
ஸ்மார்ட் சிட்டி டெண்டர்கள் அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்திலும் கொள்ளையடிக்கப்பட்டு அரசு கஜானாவில் காசு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார். முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியில்லை என்று கைவிரிப்பவர்கள், ஆயிரக்கணக்கான கோடிகளை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் தாக்கி பேசினார்.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை
கடந்த 10 ஆண்டுகளில் கல்விக்கடனை ரத்து செய்யவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அனைத்துக் குடும்பங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஏமாற்ற நினைக்கிறார்கள்
மேலும், அதிமுக மக்களிடம் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையின் மூலம் ஏமாற்ற நினைக்கிறது. தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திமுகவுக்கு ஆதரவாகப் பொதுமக்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications