சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து விபத்து! நல்வாய்ப்பாக பயணிகள் தப்பினர்
திருச்சி: திருநெல்வேலியின் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி வந்த, ஆம்னி பஸ் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மன்னார்புரத்தில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து, சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. பஸ்சை சாத்தூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் ஓட்டிச் வந்திருக்கிறார். சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்திருக்கிறார்.

பேருந்தில் 28 பயணிகள் இருந்திருக்கின்றனர். பஸ் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்திருக்கிறது.
உடனே சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். இதை அடுத்து சில நொடிகளில் டயர் வெடித்த பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பஸ்ஸில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி பஸ்ஸிலிருந்து கீழே இறக்கியுள்ளனர். இதற்கிடையே சற்று நேரத்தில் தீ வேகமாக மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர், 2 வாகனங்களில், உதவி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் நாலாபுறமும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் தீக்கிரையாகி எலும்பு கூடானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் அவசர அவசரமாக இறங்கியதால் சிலரது உடைமைகள் பஸ்ஸில் சிக்கிக் கொண்டது. அந்த உடமைகள் தீக்கிரையாகின.
பின்னர் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் கூறும்போது, "சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். பஸ்ஸின் டீசல் டேங்க் வெடித்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பாலத்தில் கூட சேதாரம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது" என்றார். இந்த தீ விபத்து காரணமாக மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.












Click it and Unblock the Notifications