அதிர்ச்சியில் திருச்சி.. ஒரு வயது குழந்தைக்கு கொரோனா.. தந்தை மூலம் பரவியது.. கலக்கத்தில் மக்கள்!
திருச்சி: ஒரேநாளில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது திருச்சி மக்களை கலங்க வைத்துள்ளது.. இந்த 5 பேரில் ஒரு வயது குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தி உள்ளது!
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக சில தினங்களாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. சிறப்பு வார்டுகளில் அறிகுறிகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் வைரஸ் பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஆயிரத்தை கடந்து போயுள்ள நிலையில் திருச்சியில் மட்டும் நேற்றைய தினம் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த 5 பேரில் ஒரு வயது குழந்தையும் அடக்கம். இதனால் திருச்சியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39-லிருந்து 44 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று ஏற்பட்டுள்ள குழந்தையின் தந்தை ஏற்கனவே தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளார்.. அவர் மூலமாகத்தான் குழந்தைக்கும் வைரஸ் பரவியுள்ளது. ஒரு வயதே நிரம்பிய குழந்தை என்பதால், அம்மாவும் உடனிருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு இப்போது டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படுமா? புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று அறிவிப்பு?
நாளுக்கு நாள் திருச்சியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருச்சி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கலெக்டர் அறிவுறுத்தியபடியே உள்ளார். மேலும் 4 சக்கர வாகனங்களை அரசாங்க ஊழியர்கள் தவிர பொதுமக்கள் யாரும் பயன்படுத்தி வெளியே வரக்கூடாது என்று கடுமையான உத்தரவினையும் கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
தினந்தோறும் பாதிப்புகள் உயர்ந்து வருவதால், மக்களிடையே அச்ச உணர்வு எழுந்துள்ளது.. தற்போது பெரும்பாலான சாலைகளும் திருச்சியில் வெறிச்சோடியே உள்ளது.