சொன்னால், சொன்ன மாதிரி.. அன்பில் மகேஷ் ‘ஷார்ப்’! அரக்க பறக்க ஓடி வந்த நிர்வாகிகள்!
திருச்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் நேர மேலாண்மை அதிகாரிகளையும் சரி, கட்சிக்காரர்களையும் சரி வியக்க வைத்துவிடுகிறது என்று திமுக நிர்வாகிகள் நெகிழ்ந்து வருகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அமைச்சர்கள் 6 மணிக்கு வந்துவிடுவார்கள் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டால் 8 மணிக்கு மேல்தான் அமைச்சர்கள் அந்த நிகழ்ச்சி மேடைக்கே வருவார்கள். இது காலம் காலமாக உள்ள ஒரு நடைமுறை. இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காலை 10 மணிக்கு அரசுத்துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டம் என்றால் குறைந்தது கால் மணி நேரமாவது தாமதமாக அமைச்சர்கள் செல்லும் கதைகளும் உண்டு. ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷ் இதிலிருந்து விதிவிலக்காக இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
குறித்த நேரத்தில்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சொன்னால்.. சொன்னது போல் குறித்த நேரத்தில் மிகச்சரியாக ஆஜராகி அங்கிருக்கும் லோக்கல் கட்சி நிர்வாகிகளை அரக்க பறக்க ஓடி வர வைத்து விடுகிறார். உதாரணத்துக்கு இன்று காலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்காக இளங்காகுறிச்சி என்ற கிராமத்திற்கு சென்றதை கூறலாம். காலை 8.30 மணிக்கு அன்பில் மகேஷ் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மிகச்சரியாக குறித்த நேரத்தில் அந்தக் கிராமத்திற்குள் சென்றுவிட்டார். இது அங்கிருந்த கட்சிக்காரர்களை அசர வைத்துவிட்டது.
5 நிமிடங்களுக்கு முன்பே
இதேபோல் கடந்த வாரம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற தாம் எழுதிய நூல் அறிமுக விழாவுக்கும், அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்னதாகவே என்ட்ரி கொடுத்திருந்தார். 'காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது' என்ற பொன்மொழிக்கு ஏற்ப மற்றவர்கள் தங்களுக்காக காத்திருந்து அவர்களின் பொன்னான நேரத்தை வீணடித்துவிடக்கூடாது என ஒவ்வொரு அரசியல்வாதிகளும் உணரத் தொடங்கினால் அவர்களை பார்க்கச் செல்லும் கீழ்மட்ட நிர்வாகிகளும் மனமகிழ்வுடன் திரும்புவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications