அன்று பாபா; இன்று ஜெய்பீம்; அவர்களுக்கு இது புதிதல்ல; பணத்துக்காக மிரட்டல்; சீண்டும் பாரிவேந்தர்!
திருச்சி: ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பணம் தான் நோக்கமே தவிர வேறல்ல காரணம் என இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அதிபருமான பாரிவேந்தர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் இந்தக் கருத்தை பதிவு செய்தார்.
அவர்கள் என்று கூறினாரே தவிர எந்த ஒரு கட்சியையோ, அமைப்பையோ பாரிவேந்தர் தனது பேட்டியில் குறிப்பிடவில்லை. இருப்பினும் பாரிவேந்தரின் இந்த சாடல் பாமகவை மனதில் வைத்து தான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கோயில்கள்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் திருப்பணிக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.66 லட்சம் கொடுத்திருக்கிறார் பாரிவேந்தர் எம்.பி. இதற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்ற நிலையில், அப்போது செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். தமிழகத்தில் ஒரே குடும்பமும், ஒரே கட்சியும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவது ஜனநாயகம் அல்ல என்றும் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் தான் அது உண்மையான ஜனநாயகம் எனவும் தெரிவித்தார்.

கொள்ளை தொடர்கிறது
ஒரு சில காரணங்களால் கடந்த தேர்தல்களில் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் வரும் தேர்தல்களில் ஐ.ஜே.கே. தனித்து போட்டியிடும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்காது எனவும் பாரிவேந்தர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பது நிற்கவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இன்று எம்.பி.யாக உள்ள அவர், இந்தக் கருத்தை கூறியிருப்பதற்கான உள்காரணம் புரியவில்லை.

பணம் தான் நோக்கம்
இதைத் தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு புகைப்படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அதன் நோக்கம் என்னவாக இருக்கும், பணத்துக்காக தான் மிரட்டுகிறார்கள் என ஒரே போடாக போட்டார். அவர்களுக்கு வேறு பிரச்சனை கிடைக்கவில்லை என்பதால் இப்படி செய்வதாகவும், அவர்களுக்கு இது புதிதல்ல எனவும் பாரிவேந்தர் தெரிவித்திருக்கிறார்.

பாபா படம்
பாபா திரைப்பட விவகாரத்திலும் இதேபோல் அவர்கள் செய்திருப்பதாகவும், பத்திரிகை, தொலைக்காட்சிகள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுவதாக பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார். அவர்கள் அவர்கள் என்று கூறினாரே தவிர வெளிப்படையாக பாமக என எந்த இடத்திலும் அவர் தனது பேட்டியில் குறிப்பிடவில்லை. எஸ்.ஆர்.எம். . பல்கலைக்கழகம் குளம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ராமதாஸ் 5 ஆண்டுகளுக்கு முன்பு விடுத்த அறிக்கையே பாரிவேந்தரின் பாமக மீதான கோபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications