முடங்கி இருந்தது போதும்.. இதுதான் சரியான நேரம்! வெளியே வரும் ஓபிஎஸ்.. மிக பிரம்மாண்ட அரசியல் திட்டம்
அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் ஓ பன்னீர்செல்வம் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.
திருச்சி: அதிமுகவில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ஓ பன்னீர்செல்வம் முக்கியமான ஒரு அரசியல் திட்டத்தை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
அதிமுகவில் சட்ட ரீதியாக உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி இந்த நீண்ட மோதலில் ஒருவழியாக வென்றுவிட்டார். கட்சி நிர்வாகிகள் சப்போர்ட், பொதுக்குழு உறுப்பினர்கள் சப்போர்ட், மாஜி அமைச்சர்கள் சப்போர்ட், எம்எல்ஏக்கள் சப்போர்ட் என்று எல்லாம் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி இதில் எளிதாக வென்றுவிட்டார்.
பொதுக்குழு வழக்கில் அவர் வென்றுவிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

தோல்வி
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறார். முதல் விஷயம் நீதிமன்றம் வழியாக கட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த ஓ பன்னீர்செல்வம் ஏமாற்றம் அடைந்து உள்ளார். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும், என்றும் கூறி உள்ளது.

தேர்தல்
அதற்கு முன்பாக இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு கிடைத்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதத்தின் அடிப்படையில் அவருக்கு சின்னம் கிடைத்தது. கையெழுத்து போடும் அதிகாரம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு சென்றது. ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளர் செந்திலை வாபஸ் வாங்க சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதோடு ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் அவருடைய அணியில் இருந்து வெளியேறினார். கொத்து கொத்தாக நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு எடப்பாடி அணியில் அவர் இணைந்தார். இதுவும் ஓ பன்னீர்செல்வத்திற்கு தோல்வியாக பார்க்கப்படுகிறது.

போயிட்டாங்க
இனி வரும் நாட்களில் மேலும் நிர்வாகிகள் அணி மாற வாய்ப்புகள் உள்ளன. இது போக தற்போது ஈரோடு கிழக்கில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்திலும் எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இப்படி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வந்த ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருந்தார். அதோடு இவரின் தாயாரும் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் இவர் மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

திட்டம் என்ன?
இந்த நிலையில்தான் எடப்பாடி - அண்ணாமலை இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.மேலும் தனக்கு நெருக்கமான பல நிர்வாகிகளை அதிமுக நோக்கி அவர் இழுத்து வருகிறார்.நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். அதிமுகவில் இப்படி பாஜகவினர் பலர் இணைவதை விமர்சனம் செய்த அண்ணாமலை, கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்., என்று கூறி உள்ளார். இதற்கு எதிராக ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனால் அதிமுக - பாஜக இடையிலான பிளவு பெரிதாகி உள்ளது.

இதுதான் சான்ஸ்
அதோடு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்று உள்ளது. எடப்பாடிக்கு சின்னம் கிடைத்தும், ஓபிஎஸ், அமமுக தரப்பு போட்டியிடாத போதும் கூட அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. எடப்பாடியின் தோல்வி, அதிமுகவிற்கு எதிராக பாஜக இருக்கும் சூழ்நிலை என்று இந்த சான்சை பயன்படுத்திக்கொண்டு தனது பவரை காட்ட ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளாராம். அதன்படி திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளாராம். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக பிரம்மாண்ட கூட்டத்தை பெரும் செலவு செய்து நடத்த உள்ளாராம். பொன்மலையில் இவர் அதிமுக பெயரில் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி.. தனக்கு பின்தான் கட்சி இருக்கிறது என்று காட்ட திட்டமிட்டுள்ளாராம். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தலால் அதிமுக நிர்வாகிகள் அப்செட்டில் உள்ள நிலையில், அவர்களை தன் பக்கம் திருப்பும் விதமாக ஓ பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications