நிம்மதியின்றி தவிக்கும் திமுக மாஜி அமைச்சரின் குடும்பம்! யார் இந்த புலவர் செங்குட்டுவன்?
திருச்சி: மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவனின் மகன்கள் இருவருக்கும், மகளுக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், யார் இந்த செங்குட்டுவன், திமுக ஆட்சியில் எப்போது அமைச்சராக இருந்தார் என்பது பற்றி பார்க்கலாம்.
23 ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக மறைந்த மாஜி அமைச்சரின் குடும்பம் நிம்மதியின்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வேலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புலவர் செங்குட்டுவன். அண்ணா காலம் முதலே திமுகவில் 7 முறை ஒன்றியச் செயலாளராக இருந்த இவர், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மிசா காலத்தில் கைதாகி ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தவர் செங்குட்டுவன். கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் புலவர் செங்குட்டுவன் இடம்பெற்றிருக்கிறார் என்றால் அவருக்கு கருணாநிதியோடு அப்போது எவ்வளவு நெருக்கம் இருந்திருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.
செங்குட்டுவன் எம்.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அவரை புலவர் என்று கருணாநிதி அடைமொழியிட்டு அழைக்கத் தொடங்கினார். நாளடைவில் புலவர் செங்குட்டுவன் என எல்லோராலும் அழைக்கப்பட்டார். மருங்காபுரி தொகுதியில் (அதாவது இப்போது மணப்பாறை தொகுதியாக உள்ளதே அது தான்) 1996ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற செங்குட்டுவனுக்கு, 1996-2001 திமுக அமைச்சரவையில் இடம் கொடுத்து இன்ப அதிர்ச்சியூட்டினார் கருணாநிதி. இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக 5 ஆண்டுகாலம் பதவி வகித்தார் செங்குட்டுவன்.
திருச்சி மாவட்டத்துக்கு எப்போதுமே இரண்டு அமைச்சர்களை கொடுக்கக் கூடிய கட்சி திமுக. அந்த வகையில் 1996 தேர்தலில் திமுக ஆட்சி அமைந்த போது கே.என்.நேரு, புலவர் செங்குட்டுவன் என இரண்டு அமைச்சர்களை திருச்சி மாவட்டத்துக்கு கொடுத்தார் கருணாநிதி.
லோக்கல் பாலிடிக்ஸில் கே.என்.நேருவை மிஞ்சி அரசியல் முடியாததால் அப்படியே ஆஃப் ஆனார் புலவர் செங்குட்டுவன். கூடவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கும் அவரது தூக்கத்தை தொலைத்தது. ஒரு கட்டத்தில் திமுக தலைமை தன்னை ஒதுக்குவதாக எண்ணிய செங்குட்டுவன் 2013ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். அங்கும் அவருக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவுக்கே திரும்பிவிட்டார் செங்குட்டுவன். அண்ணா காலத்து சீனியரான இவர் அரசியலில் எங்கேயோ போயிருக்க வேண்டும். அவரது போதாத காலம் கடைசியில் மருத்துவமனை செல்வதற்கு கூட துணைக்கு ஆளில்லாமல் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் காலமாகிவிட்ட நிலையிலும், அவரது குடும்பத்தை சொத்துக்குவிப்பு வழக்கு துரத்தி வருகிறது. செங்குட்டுவன் மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி ஆகியோருக்கு திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில் ஜாமின் மனு ஏற்கப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications