உதயநிதியின் சூப்பர் ஐடியா.. வருகிறது ‘கலைஞா் ஆா்மி’..! திமுகவில் புதிய அணி.. அமைச்சர் சொன்ன தகவல்
திருச்சி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் 'கலைஞா் ஆா்மி' என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சி என்றால், அது திமுக தான்.. இந்தியா முழுவதும் ஆண்ட கட்சியாக இருந்த காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பி ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சியாக திமுக உள்ளது.

அக்கட்சி உருவான போது பலரும் விமர்சித்த நிலையில், அக்கட்சியின் நிறுவன தலைவராக இருந்த அண்ணா, அதனைக் கண்டு கொள்ளாமல் தனது பாதையை சீர்செதுக்கி தனது 'தம்பிகளை’ தயார் படுத்தி காங்கிரஸ் இல்லாத ஒரு மாநில அரசை உருவாக்கிக் காட்டினார்.
அன்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் தற்போது வரை எழ முடியவில்லை. திமுகவைப் பின்பற்றியே அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் தமிழக அரசியலில் களம் கண்டன. ஆனால் எல்லாவற்றிற்கும் விதை போட்டது திமுக. காரணம் அதன் கட்டமைப்பு. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் நிச்சயம் திமுகவின், கொடியும் நிர்வாகிகளும் இருப்பார். ஏன் தெருவுக்கு ஒரு திமுக குடும்பம் நிச்சயம் இருக்கும்.
மெயின் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்ல.. சார்பு அணிகளும் திமுகவின் அசுர பலத்துக்கு காரணமாக உள்ளது. அந்த அமைப்புகளுக்கு தலைவர், செயலாளர், து.செயலாளர், அமைப்பாளர், பொருளாளர் தொடங்கி இணை நிர்வாகிகள் வரை இருக்கின்றனர். கூடுதல் பலமாக பிரச்சாரக் குழுவும் இந்த அணிகளில் உள்ளனர்.
திமுகவை பொருத்தவரை இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, மகளிர் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, அயலக அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, சட்டத் துறை, சிறுபான்மை நல உரிமை பிரிவு, சுற்றுச் சூழல் அணி , தொண்டர் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, மருத்துவ அணி, மீனவர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி என மொத்தம் 23 அணிகள் உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி பரிந்துரைப்படி 'கலைஞா் ஆா்மி’ என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட கிழக்கு மாநகர திமுக சாா்பில், இரண்டாவது பொது உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அதில்,”திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் 'கலைஞா் ஆா்மி’ என்ற ஒரு அணியை உருவாக்கி உள்ளோம். இந்த பெயரை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தான் பரிந்துரைத்தாா்.
இளைஞா்களை திமுக-வின் கொள்கையால் ஈா்க்கச் செய்து, அடுத்த தலைமுறைக்கு கட்சியை கொண்டு சோ்க்கும் வகையில் இந்த அணியின் செயல்பாடுகள் அமையும். தமிழகத்தில் முதற்கட்டமாக திருவெறும்பூா் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது கட்சிக்கு கூடுதல் வலு சோ்க்கும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிா் உரிமைத் தொகையாக ரூபாய் ஆயிரத்தை வழங்கி விட்டோம் என்றால், 2026 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடுவோம் ” என்றார்.












Click it and Unblock the Notifications