அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. “அதிமுக ஆட்சி தான் காரணம்”.. சொல்வது அமைச்சர்!
திருச்சி: திருச்சியில் அரசு பேருந்தில் இருந்து நடத்துநர், அவர் அமர்ந்திருந்த இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் மதியம் அரசு நகரப் பேருந்து புறப்பட்டது. அப்போது அந்தப் பேருந்தில், ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்த இருக்கை ஒன்றில் எடமலைபட்டி புதூரை சேர்ந்த நடத்துநர் முருகேசன் (54) அமர்ந்திருந்தார்.

பேருந்து, கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, சேதமடைந்த இருக்கை முழுவதும் கழன்று, பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து, நடத்துநர் முருகேசனும் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.
நடத்துநர், இருக்கையுடன் பேருந்தில் இருந்து பறந்து விழுந்ததைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால், ஓட்டுநர் பாஸ்கரன் பேருந்தை நிறுத்தினார். காயமடைந்த நடத்துநர் முருகேசனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள், வேறு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சேதமடைந்த பேருந்து உடனே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், பேருந்தின் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, அரசுப் பேருந்து சேதமடைந்திருந்த நிலையிலும் இயக்கியதன் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியில் அரசுப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த சம்பவம் குறித்து இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் கடலூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், "கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது புதிதாக 7 ஆயிரம் பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். முதற்கட்டமாக 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய பேருந்துகள் வர வர, பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும். இந்த ஆண்டுக்குள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பேருந்துகள் முழுமையாக மாற்றப்படும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications