இனி விட முடியாது! அத்துமீறினால் கடும் நடவடிக்கை பாயும்.. மாணவர்களை எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சி ஜோசப் கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து, ஆனால்.. 'அவங்களுக்கு மட்டும் செக்’ வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!
பயிற்சி முகாம்
இந்த பயிற்சி முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி.கள்,உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். இதில் காவல் நிலையத்தில் நடைபெறும் மரணங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, "திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தற்போது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லாக்அப் மரணங்கள்
அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்று உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்களில் ஒருவர்கூட இனி உயிர் இழக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
பயிற்சிகள்
அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து இருக்கக்கூடிய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. காவல்துறையினர் தாக்கி தான், கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் உயிர் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் உடல்நலக் குறைவாலும் மருத்துவ கட்டுப்பாட்டில் இருந்தவர்களும் கூட உயிர் இழப்பார்கள்.
இனி யாரும் உயிரிழக்கக் கூடாது
ஒரு சிலர் காவலர்களைக் கூட தாக்குகிறார்கள். அப்போது அவர்களிடமிருந்து காவலர்கள் தங்களை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் வர்மக்கலை, கராத்தே குங்பூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் இந்த கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. சிறையில் இனி ஒருவர்கூட இறக்கக்கூடாது. காவல் நிலைய மரணம் இனி இருக்கக்கூடாது.
நல்லவர்கள் அஞ்சத் தேவையில்லை
காவல்துறையினர் தேவைக்கு மட்டும் தங்கள் பலத்தை உபயோகப்படுத்தலாம். குற்றவாளிகள் தான் காவல்துறையினரை பார்த்துப் பயப்பட வேண்டும். நல்லவர்கள் பயப்படத் தேவையில்லை. இதுவரையில் சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேருக்குச் சிறந்த டாக்டர்கள் மூலமாக மனநல பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது அவர்கள் மூலமாக காவல்துறையினர் அதிகமானோருக்கு அந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
விழிப்புணர்வு
காவலர்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தைக் குறைக்கவே கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆபத்து வரும்போது காவலர்கள் திறமையாகச் செயல்பட வேண்டும். பொதுமக்களை காவல்துறையினர் ஆபத்து நேரத்தில் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தி வருகிறோம்.
மாணவர்கள் மீது நடவடிக்கை
கள்ளச்சாராயம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சில மலைப் பகுதிகளில் மட்டும் தான் கள்ளச்சாராயம் உள்ளது. அதையும் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையில் சேர்வதற்காக 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். மேலும், கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.